
தமிழ்நாட்டில் இந்தி பேசும் வடமாநிலத்தவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்று வட இந்தியாவில் வதந்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. வதந்தி என்பதற்கான ஆதாரங்களைத் தேடி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

வாசகர் ஒருவர் இந்தியில் வெளியான ட்வீட் ஒன்றைத் தமிழாக்கம் செய்து இது உண்மையா என்று கண்டறிந்து கூறும்படி நமக்கு (9049044263) அனுப்பியிருந்தார். அதில், “வைரல் வீடியோ. தமிழ்நாட்டில் இந்தி பேசுபவர்கள் மீது தொடர் கொலைவெறி தாக்குதல்கள், அனைத்து இந்தி பெல்ட் அரசுகள் மற்றும் மத்திய அரசு மௌனம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நமக்கு அனுப்பிய புகைப்படத்தில் ட்விட்டர் முகவரி இருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive
அந்த முகவரிக்குச் சென்று வீடியோ பதிவைத் தேடி எடுத்தோம். அதில் இரண்டு வீடியோக்கள் பதிவிடப்பட்டிருந்தது. இதை Poornima Bhardwaj (@pklbhardwaj) என்ற ட்விட்டர் ஐடியைக் கொண்டவர் பதிவிட்டிருந்தார்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் டிக்கெட் இன்றி, முன்பதிவு ரயில் பெட்டிகளில் பயணம் செய்த வட இந்திய கூலித் தொழிலாளர்கள் நடு வழியில் இறக்கிவிடப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் இப்படி பாதிக்கப்பட்ட யாரோ ஒருவர் சமூக ஊடகங்களில் தமிழ்நாட்டில் இந்தி பேசும் வட மாநில கூலித் தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டுத் தொங்க விடப்படுகின்றனர் என்று தமிழர்களைத் தாலிபான்கள் ரேஞ்சுக்கு டேமேஜ் செய்து பதிவிட்டுள்ளார். இதை உண்மை என்று நம்பி பீகார் மாநில பாஜக, சட்டமன்றத்திலேயே இந்த பிரச்னையை எழுப்பியுள்ளது.
ஆனால் அவர்கள் பகிரும் வீடியோவில் ஒன்று உண்மையில் சில வாரங்களுக்கு முன்பு கோவை நீதிமன்றம் அருகே நடந்த கொலை வழக்கின் வீடியோ. மற்றொன்றோ ராஜஸ்தானில் நடந்த கொலையின் வீடியோ. எனவே, வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் கொலை செய்யப்படுகிறார்கள் என்பது தவறான தகவல் என்தை உறுதி செய்ய ஆதாரங்களைத் தேடி எடுத்தோம்.
முதலில், தமிழ்நாட்டில் கோவையில் நடந்த கொலை தொடர்பாக கோவை மாநகர காவல் துறையைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர்கள் கொலை செய்தவனும் கொலை செய்யப்பட்டவனும் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள்தான். வட இந்தியர்கள் கொலை செய்யப்படவில்லை. இது தவறான தகவல் என்றனர். விசாரணை அதிகாரியிடம் பேச வேண்டும் என்று நாம் கேட்டபோது, கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தின் தொலைப்பேசி நம்பரை (9498101144) நமக்குக் கொடுத்தனர். காவல் நிலையத்தை தொடர்புகொண்டு இந்த வீடியோ பற்றி கேட்டோம். அவர்களும் கொலை செய்யப்பட்டவர் வட இந்தியர் இல்லை என்று உறுதி செய்தார். மேலும், இது பற்றி டிஜிபி-யே விளக்கம் அளித்துள்ள நிலையில் நாங்கள் விளக்கம் அளிப்பது சரியாக இருக்காது என்று கூறினர்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு காவல் துறையின் ட்விட்டர் பக்கத்தைப் பார்வையிட்டோம். டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில், ‘’கோவை நீதிமன்றம் அருகில் நடந்த கொலையைத் தவறாகப் பகிர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் கொலை செய்யப்படுவதாகப் பரவும் தகவல் வெறும் வதந்தி” என்று குறிப்பிட்டிருந்தார்.
அடுத்ததாக பழ வண்டி அருகே ஒருவர் கத்தியால் குத்தப்படும் வீடியோ பற்றித் தேடினோம். வீடியோவை புகைப்படங்களாக மாற்றி, கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது, அந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்தது என்று செய்திகள், சமூக ஊடக பதிவுகள் நமக்கு கிடைத்தன. பிப்ரவரி 1, 2023 அன்று வெளியான இந்தி நாளிதழ் செய்தி கிடைத்தது. அதில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மூத்த வழக்கறிஞர் ஜுக்ராஜ் சவுகான் குத்தி கொலை செய்யப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நம் ஊரின் குஷ்பு சுந்தர் இந்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, ஏன் காங்கிரஸ் கட்சியினர், ராகுல் காந்தி மௌனம் காக்கின்றனர் என்று எல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஜோத்பூர் போலீஸ் “நிலத்தகராறு காரணமாக இந்த கொலை நடந்தது” என்று விளக்கம் அளித்து ட்வீட் பதிவு செய்திருப்பதும் நமக்குக் கிடைத்தது. இவை எல்லாம் இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கவில்லை என்பதை தெளிவாக்கின.
இதன் மூலம் தமிழ்நாட்டில் இந்தியில் பேசினார்கள் என்பதற்காக வட இந்தியத் தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கோவையில் நீதிமன்றம் அருகே நடந்த கொலையின் வீடியோ மற்றும் ராஜஸ்தானில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வீடியோவை தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் தாக்கப்படுவதாக தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தமிழ்நாட்டில் இந்தி பேசும் வட மாநிலத்தவர்கள் கொலை செய்யப்படுவதாக பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
