கொடநாடு என்று கூறியதும் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினாரா எடப்பாடி பழனிசாமி?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொடநாடு பற்றிப் பேசத் தொடங்கியதும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தார் என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக தற்காலிக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அணியினர் அவையிலிருந்து வெளியேறுகின்றனர். முதலமைச்சர் பேசும் போது, “கொடநாடு எஸ்டேட் சாதாரணமான இடமல்ல… அதை எதிர்க்கட்சித் தலைவர் மறந்துவிடக் கூடாது” என்று ஸ்டாலின் கூறியதும் எடப்பாடி பழனிசாமி வெளியேறுவது போன்று அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ளது.

நிலைத் தகவலில், “கொடநாடு என்றதுமே.. ஓட்டம் பிடித்த எடுபிடி..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை அம்மா வினித் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜனவரி 9ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டம் ஆளுநர் உரையுடன் ஜனவரி 9, 2023 அன்று தொடங்கியது. தமிழ்நாடு அரசு தயாரித்துக்கொடுத்த அறிக்கையில் சில பகுதிகளை ஆளுநர் தவிர்த்தார் என்பதுடன் கூடுதலாக சிலவற்றை அவர் பேசினார் என்றும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், சட்டப் பேரவையில் கொடநாடு பற்றி முதலமைச்சர் மு.கஸ்டாலின் பேசியதாகவும் அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தார் என்றும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

ஜனவரி 9, 2023 அன்று சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தைத் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். கொடநாடு பற்றி அவர் பேசியதாக எந்த செய்தியும் இல்லை. மேலும், ஸ்டாலின் பேசியதாக கூறப்படும் ஆடியோவுக்கும் ஸ்டாலின் வாய் அசைவுக்கும் தொடர்பு இல்லை. எனவே, எடிட் செய்து ஆடியோ மாற்றப்பட்ட வீடியோ போல இது இருந்தது.

எனவே, தந்தி டிவி வெளியிட்ட உண்மையான வீடியோவை அதன் யூடியூப் பக்கத்திலிருந்து எடுத்தோம். “முதல்வர் ஸ்டாலின் பேசும் போது விறுவிறுவென வெளியேறிய ஈபிஎஸ் – பின்னாலேயே சென்ற ஓபிஎஸ்” என்று தலைப்பிட்டு வீடியோவை பதிவிட்டிருந்தனர். அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, “எதையும் நாங்கள் பதிவு செய்யவில்லை. பேரவையில் மிகவும் கண்ணியத்தோடு” என்று பேசும் போது எடப்பாடி பழனிசாமி வெளியேறுவது தெரிந்தது. இந்த வீடியோவை எடிட் செய்து ஆடியோவை மாற்றியுள்ளனர் என்பது தெளிவானது.

வேறு ஊடகங்களில் வெளியான வீடியோவையும் பார்த்தோம். அவற்றிலும் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து வாசித்ததுதான் இருந்தது. மதிமுகம் யூடியூப் சேனலில் மு.க.ஸ்டாலின் கண்ணியத்தோடு என்று பேசும் போது எடப்பாடி பழனிசாமி எழுந்து வெளியே செல்வது தெளிவாகத் தெரிகிறது. இதன் மூலம், கொடநாடு பற்றி சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதால் எடப்பாடி பழனிசாமி வெளியேறினார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

எடிட் செய்த வீடியோவையும், உண்மையான வீடியோவையும் ஒப்பிட்டு, கீழே மீண்டும் ஒருமுறை இணைத்துள்ளோம். 

முடிவு:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொடநாடு பற்றி பேச்சு எழுந்ததும் எடப்பாடி பழனிசாமி வெளியேறினார் என்று பரவும் வீடியோவில் ஆடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கொடநாடு என்று கூறியதும் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினாரா எடப்பாடி பழனிசாமி?

Fact Check By: Chendur Pandian 

Result: False