வாக்குப் பதிவு ஆவண அறைக்குள் சென்ற விவகாரத்தில் மேலும் மூன்று பேர் சஸ்பெண்ட்?
மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு ஆவண அறைக்குள் சென்ற பெண் தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருடன் சென்ற மூன்று அரசு ஊழியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அரசு ஊழியர் குற்றங்கள் என்ற ஃபேஸ்புக் குழு பதிவிட்டுள்ளது. இந்து தமிழ் நாளிதழில் இருந்து, இச்செய்தி எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவல் விவரம்:
வாக்குப்பதிவு ஆவண அறைக்குள் வட்டாட்சியர் நுழைந்த விவகாரம்:
மேலும் 3 பேர் சஸ்பெண்ட்,
உதவி தேர்தல் அலுவலருக்கு நோட்டீஸ்!
https://www.facebook.com/groups/284904315696710/permalink/381537259366748/
மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு அருகில் உள்ள வாக்குப்பதிவு ஆவண அறைக்கு சென்ற பெண் தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், உதவி தேர்தல் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. இந்து தமிழ் நாளிதழில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதனால், பலரும் இந்தப் பதிவைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மதுரையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு அருகில் உள்ள வாக்குப்பதிவு ஆவணங்கள் இருந்த அறைக்கு பெண் தாசில்தார் சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் முதலில் பெண் தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து மூன்று அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்று இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22-4-2019 தேதியிட்ட இந்து தமிழ் நாளிதழில் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் செய்திக்கான லிங்க் இல்லை. இந்து தமிழ் நாளிதழ் இணைய முகவரி மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. இதை அரசு ஊழியர் குற்றம் என்ற குழு பகிர்ந்திருந்தது. இதன் காரணமாக இந்து தமிழ் நாளிதழ் பெயரில் ஏதேனும் தவறான செய்தி பரப்பப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தோம்.
மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் மதுரை மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு கடந்த 21ம் தேதி (ஏப்ரல், 2019) சனிக்கிழமை பெண் தாசில்தார் சம்பூரணம் சென்றுள்ளார். அவருடன் மூன்று பேரும் சென்றுள்ளனர். அங்கிருந்த ஆவணங்களை வெளியே எடுத்து வந்து இவர்கள் ஜெராக்ஸ் எடுத்துள்ளனர். இதை அறிந்து அ.தி.மு.க தவிர்த்து இதர வேட்பாளர்கள் அங்கு வந்தனர். அவர்களுக்கு சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தாசில்தார் சம்பூரணம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த விவகாரத்தில், அவருடன் சென்ற மேலும் மூன்று அரசு ஊழியர்கள் திங்கட் கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த தகவல் இந்து தமிழ் நாளிதழ் உள்பட எல்லா நாளிதழ்களிலும் செய்தி இணைய தளங்களிலும் வெளியானது. இந்து நாளிதழில் வெளியான செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்து தமிழ் நாளிதழில் வெளியான செய்தியையும், இந்த பதிவையும் ஒப்பிட்டுப் பார்த்தோம். இந்து தமிழ் இணையத்தில் வெளியான செய்தி அப்படியே காப்பி செய்து பேஸ்ட் செய்யப்பட்டிருந்தது. படம் மட்டும் மாற்றப்பட்டிருந்தது.
நடந்த நிகழ்வை மட்டுமே பகிர்ந்திருக்கின்றனர். இதில், திருத்தம் ஏதும் இல்லை என்பது தெரியவந்தது.
இந்த பதிவை வெளியிட்ட செல்வம் பழனிசாமியின் பின்னணியை ஆய்வு செய்தோம். தன்னை அவர் சுய தொழில் செய்பவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அரசு துறையில் நடக்கும் முறைகேடுகளை குறிப்பாக அரசு ஊழியர்கள் தொடர்பான பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தது தெரிந்தது. இந்த பதிவுகள் எல்லாம் முன்னணி இதழ்களில் வந்ததாகவே இருந்தது. சமூக விழிப்புணர்வு பதிவுகளும் இருந்தன.
முடிவு:
வாக்குப்பதிவு ஆவண அறைக்குள் வட்டாட்சியர் நுழைந்த விவகாரம் தொடர்பாக மேலும் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அரசு ஊழியர் குற்றம் என்ற ஃபேஸ்புக் குழு வெளியிட்ட செய்தியில் தவறு இல்லை என்பது ஆதாரங்கள் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரம் என்பதாலும், பகிர்ந்த குழுவின் பெயர் காரணமாகவும் இந்த செய்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. மற்றபடி இது உண்மைத்தகவலே என முடிவு செய்யப்படுகிறது.
Title:வாக்குப் பதிவு ஆவண அறைக்குள் சென்ற விவகாரத்தில் மேலும் மூன்று பேர் சஸ்பெண்ட்?
Fact Check By: Praveen KumarResult: True