
டெல்லி கலவரத்தின்போது போலீசாரை துப்பாக்கி காட்டிய நபரின் பெயர் ஷாரூக் இல்லை என்றும், அவரது உண்மையா பெயர் மிஸ்ரா என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
டெல்லியில் போலீசை துப்பாக்கி காட்டி மிரட்டிய குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராளி ஷாரூக் என்ற பதிவின் படம், அனுராக் டி மிஸ்ரா என்ற ஃபேஸ்புக் ஐடி படம் என சில படங்கள் சேர்த்து மொத்தமாக கொலாஜ் செய்யப்பட்டு பகிரப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “டெல்லியில் காவலரிடம் துப்பாகியை காட்டி மிரட்டிய இவனுக்கு RSS BJP யினா் வைத்த பெயர் ஷாருக். ஆனால் இவனது பெயர் மிஸ்ரா என்பது இப்போது தெரியவந்திருக்கிறது …” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, ஜெ. நூர்தீன் திருமுல்லைவாசல் என்பவர் 2020 பிப்ரவரி 27 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இது போன்ற பதிவை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க சார்பில் குடியுரிமை ஆதரவு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால், இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. மோதல் கலவரமாக மாறியது. இந்த சம்பவத்தின் காட்சிகளை எடுத்து இரு தரப்பும் தங்களுக்கு சாதகமாக பரப்பி வருகின்றன.
அந்த வகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நபர் போலீசாரை நோக்கி துப்பாக்கியைக் காட்டி மிரட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வைரல் ஆகின. அந்த நபர் பெயர் ஷாரூக் என்று டெல்லி போலீசார் தெரிவித்ததாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
Archived Link |
போலீசாரை மிரட்டிய அந்த மெரூன் நிற டி-ஷர்ட் அணிந்திருந்த நபரை டெல்லி போலீசார் உடனடியாக கைது செய்தனர். இந்த நிலையில், அனுராக் டி. மிஸ்ரா என்ற பெயர் கொண்ட நபரின் ஃபேஸ்புக் ஐடி-யை வைத்து கைது செய்யப்பட்ட நபர் ஷாரூக் இல்லை என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

ndtv.com | Archived Link |
படத்தில் உள்ள அனுராக் டி. மிஸ்ரா (Anurag D. Mishra) என்ற ஃபேஸ்புக் ஐடியை ஆய்வு செய்தோம். அப்போது அவர் மும்பையில் வசிப்பதாகவும், திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். தன்னுடைய சொந்த ஊர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Archived Link |
அவருடைய பதிவுகளை ஆய்வு செய்தபோது, தன்னுடைய படத்தை டெல்லியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருடன் தொடர்புப்படுத்தி சமூக ஊடகங்களில் தொடர்ந்து வதந்தி பரப்பப்பட்டு வருவதாகவும், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.

Facebook Link | Archived Link |
மேலும், டெல்லியில் போலீசாரை நோக்கி துப்பாக்கியை நீட்டிய நபர் அனுராக் கே. மிஸ்ரா இல்லை என்று வெளியான பல்வேறு செய்திகளை இவர் ஷேர் செய்திருந்தார். மேலும், டெல்லியில் கைது செய்யப்பட்ட நபர் தான் இல்லை என்று தொடர்ந்து இரண்டு மூன்று லைவ் வீடியோக்களையும் அவர் வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி பிரிவிலும் கூட இந்த செய்தியை வெளியிட்டிருந்தனர். சமூக ஊடகங்களில் பகிரப்படும் அனுராக் டி. மிஸ்ராவும் டெல்லி சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஷாரூக்கும் வேறு வேறு நபர்கள் என்று அதில் உறுதி செய்திருந்தனர். அந்த செய்தியை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில், டெல்லியில் போலீசாரை நோக்கி துப்பாக்கியை நீட்டிய நபர் பெயர் ஷாரூக் இல்லை, அனுராக் கே.மிஸ்ரா என்று பகிரப்படும் பதிவுகள் தவறானவை என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:போலீசை துப்பாக்கி காட்டி மிரட்டியது ஷாரூக்கா… மிஸ்ராவா? – உண்மை அறிவோம்!
Fact Check By: Chendur PandianResult: False
