இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் இயான் மோர்கன் தமிழனா?
‘’இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் இயான் மோர்கன் ஒரு தமிழன்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Karnakara Pandi என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இதில், இயான் மோர்கன் புகைப்படத்தை பகிர்ந்து, தமிழனா இருந்தால் பகிருங்கள், என்று கூறியுள்ளனர். அதன் கீழே, ‘’England அணியின் கேப்டன் Eion Morgan தமிழன் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இவரின் இயற்பெயர் இளைய முருகன். முருகன் மீது கொண்ட அதீத பக்தியினால் இவர் வருடம் இருமுறை பழனி வந்து மொட்டை அடித்துக் கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது,’’ என்று கூறியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நினைத்து ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பெரும் போராட்டத்திற்குப் பின், முதல்முறையாக, ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதற்கு, இயான் மோர்கன், கேப்டனாக இருந்து வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார்.
இயான் மோர்கன், உலகம் முழுவதும் பலரது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியாகியுள்ளது. இது பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், மிக விஷமத்தனமாக, தமிழ்க்கடவுள் முருகனை கேலி செய்து, வெளியிடப்பட்டதாக உள்ளது.
அயர்லாந்து நாட்டில் பிறந்தவரான இயான் மோர்கனை தமிழகத்தில் பழனி முருகன் கோயிலுடன் தொடர்புபடுத்தி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்துகொண்டே தமிழ், தமிழர் தொடர்பான அடையாளங்களை மிக எளிதாக கிண்டலடிக்கும் வழக்கம் சமூக ஊடகங்களில் பலரிடமும் அதிகளவில் காணப்படுகிறது. இதற்கு இந்த ஃபேஸ்புக் பதிவு ஒரு நல்ல உதாரணம். இதில் வேதனை என்னவெனில், இந்த மாதிரி சமூக அக்கறை இன்றி பொழுதுபோக்காகச் சிலர் பகிரும் விஷமத்தனமான தகவலை பலர் உண்மை என நம்ப தொடங்கிவிடுகின்றனர். இதுதான், இன்றைய சமூக ஊடகங்களில் உள்ள மிகப்பெரும் பிரச்னையாகும்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.