டெல்லியில் ஒன்று கூடிய தொழிலாளர், விவசாயிகள் புகைப்படமா இது?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

டெல்லியில் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக ஒன்று கூடிய விவசாயிகள், தொழிலாளர்களின் படம் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணி புகைப்படங்களை ஒன்று சேர்த்து பதிவிட்டுள்ளனர். அதில், “இன்று டெல்லியில் தொழிலாளர்கள், விவசாயிகள் மோடி அரசே வெளியேறு என முழக்கமிட்ட பேரணி காட்சி. ஊடகங்களில் வெளிவராது தோழர்களே ஷேர் செய்யுங்கள்” என்று போட்டோஷாப் முறையில் எழுதப்பட்டுள்ளது.

நிலைத் தகவலில், “டெல்லியில் ஒன்றுகூடிய தொழிற்சங்கம் & விவசாயிகள் மோடி அமித்ஷா பதவியை விட்டு வெளியேறு கோசங்கள்போட்டவன்னம் ஊர்வலமாக செல்லும் காட்சி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை Sheik Maideen என்பவர் 2020 பிப்ரவரி 28ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

டெல்லியில் பிப்ரவரி 23ம் தேதியிலிருந்து சிஏஏ எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் இடையே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. இதனால் டெல்லியின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் இவ்வளவு பிரம்மாண்ட பேரணி டெல்லியில் நடந்தது என்ற பதிவு நம்பும்படி இல்லை. 

படத்தில் பேரணியில் பங்கேற்றவர்கள் கையில் உள்ள கொடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் இருப்பதை காண முடிகிறது. மேலும் படத்தை பெரிதாக்கி பார்க்கும்போது அதில் ஏ.ஐ.கே.எஸ் என்று எழுதப்பட்டிருப்பதை காண முடிந்தது. ஆல் இந்தியா கிசான் சபா என்பது அதன் விரிவாக்கம். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு அங்கம். எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சமூக ஊடக பக்கங்களில் இந்த பேரணி தொடர்பாக செய்தி வந்துள்ளதா என்று தேடினோம். 

டெல்லி வன்முறையைக் கண்டித்து டெல்லியில் டி.ஒய்.எஃப்.ஐ ஆர்ப்பாட்டம், பிப்ரவரி 27ம் தேதி இடதுசாரி அமைப்புகள் சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடந்ததாக பதிவிட்டிருந்தனர். ஆனால், விவசாயிகள், தொழிலாளர்கள் பேரணி பற்றி எந்த ஒரு செய்தியும், பதிவும் நமக்கு கிடைக்கவில்லை. இவ்வளவு பெரிய ஊர்வலத்தை பத்திரிகைகள் மறைக்கின்றன என்று ஃபேஸ்புக் பதிவாளர் குற்றம்சாட்டியிருந்தார்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே… எனவே, பழைய படத்தை எடுத்து பகிர்ந்திருப்பது தெரிகிறது.

Facebook LinkArchived Link

இந்த படம் எப்போது எடுக்கப்பட்டது, எங்கு எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் 2018ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த பேரணியின் படம் என்று தெரியவந்தது. 

bbc.comArchived Link

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள முதல் படத்தை பிபிசி 2018ம் ஆண்டு தன்னுடைய செய்தியில் வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில், விவசாயக் கடன் தள்ளுபடி, பழங்குடியினர் நில உரிமை உள்ளிட்ட பிரச்னைகளுக்காக விவசாயிகள் ஆறாவது நாளாக நடைப்பயணம் மேற்கொண்டனர் என்று குறிப்பிட்டிருந்தனர். பல ஊடகங்களும் இந்த படத்தை அந்த காலகட்டத்தில் வெளியிட்டுள்ளனர்.

இரண்டாவது படமும் மகாராஷ்டிரா விவசாயிகள் பேரணியின்போது எடுக்கப்பட்டது என்பது தெரிந்தது. பிசினஸ் ஸ்டாண்டர்டு இணைய பக்கத்தில் அந்த படம் நமக்கு கிடைத்தது. பல ஊடகங்களில் இதை 2018 மார்ச் மாதமே வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.

thehindubusinessline.comArchived Link

நம்முடைய ஆய்வில்,

டெல்லியில் கம்யூனிஸ்ட் விவசாயிகள், தொழிலாளர்கள் சமீபத்தில் பேரணி நடத்தியதாக எந்த செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

இந்த படங்கள் மகாராஷ்டிராவில் 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஊடகங்கள் செய்தி வெளியிடாமல் மறைத்த, தொழிலாளர்கள், விவசாயிகளின் பேரணியின் படம் என்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:டெல்லியில் ஒன்று கூடிய தொழிலாளர், விவசாயிகள் புகைப்படமா இது?

Fact Check By: Chendur Pandian 

Result: False