
சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்தவனின் ஆணுறுப்பை சுட்ட போலீஸ் அதிகாரி காயத்ரி என்று ஒருவரின் படத்தை ஃபேஸ்புக்கில் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர். இந்த தகவல் மற்றும் புகைப்படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

காவல் துறை அதிகாரி தோற்றத்தில் இருக்கும் பெண்ணின் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்தவனின் ஆணுறுப்பை சுட்ட போலீஸ் அதிகாரி காயத்ரி. இவர் செய்தது சரி என்றால் Yes னு கமெண்ட் பண்ணுங்க ! Do you support police? Yes or No?” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, Karthika என்பவர் ஆகஸ்ட் 4, 2019 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இந்த பதிவை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
போலீஸ் அதிகாரி காயத்ரி என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் எங்கே, எப்போது நடந்தது என்று குறிப்பிடவில்லை. ஆதாரமாக செய்தி இணைப்பும் கொடுக்கவில்லை. அந்த பெண்ணைப் பார்க்கும்போது தமிழக போலீஸ் அதிகாரி போல இல்லை. அந்த அதிகாரியின் பெயர் காயத்ரி என்று குறிப்பிட்டுள்ளதால், அதுபோல தமிழகத்தில் யாராவது பணிபுரிகிறார்களா என்று மத்திய உள்துறை அமைச்சகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பட்டியலில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு அதிகாரியும் தமிழகத்தில் பணி புரியவில்லை என்பது தெரிந்தது.
சிறுமியிடம் சில்மிஷம் செய்தவனின் ஆணுறுப்பை சுட்ட காவல் துறை அதிகாரி என்று செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், பீகாரில் 8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 3 பேரின் ஆணுறுப்பில் சுட்ட போலீஸ் அதிகாரி என்று ஒரு செய்தி பரவியதும், அதை நம்முடைய தமிழ் ஃபேக்ட் கிரஸண்டோ உண்மை கண்டறியும் ஆய்வில் தவறான செய்தி என்று உறுதி செய்த தகவலும் கிடைத்தது. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.எனவே, இந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த பெண் மலையாளம் டி.வி சேனலில் ஒளிபரப்பான பரஸ்பரம் என்ற நாடகத்தில் நடித்தவர் என்பது தெரிந்தது. அந்த நாடகத்தில் அவரது பெயர் தீப்தி ஐ.பி.எஸ் என்பதும் அவரது உண்மையான பெயர் காயத்ரி அருண் என்பதும் தெரிந்தது.

காயத்ரி அருணின் ஃபேஸ்புக் பக்கமும் நமக்கு கிடைத்தது. அதில், காவல் துறை அதிகாரி வேடத்தில் அவர் எடுத்திருந்த பல படங்களும் நமக்கு கிடைத்தன. அவற்றில் ஒன்று…
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் வேறு எங்காவது பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று தேடினோம். அப்போது 2016ம் ஆண்டு காயத்ரி அருண் பற்றி வெளியான malayalam.filmibeat.com செய்தியில், அந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டது தெரிந்தது.

நம்முடைய ஆய்வில்,
தமிழகத்தில் காயத்ரி என்று ஐ.பி.எஸ் அதிகாரிகள் இல்லை என்பது தெரிந்தது.
சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த நபரின் ஆணுறுப்பை சுட்ட பெண் போலீஸ் அதிகாரி என்று எந்த செய்தியும் கிடைக்கவில்லை.பெண்ணிடம் சில்மிஷம் செய்தவரின் ஆணுறுப்பைச் சுட்ட பெண் போலீஸ் அதிகாரி என்று தொடர்ந்து சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
படத்தில் இருப்பவர் மலையாளம் தொலைக்காட்சி நாடகத்தில் நடித்தவர் என்பது உறுதியாகி உள்ளது.
2016ம் ஆண்டு அந்த நடிகை தொடர்பான செய்தியில் அந்த படம் பயன்படுத்தப்பட்டிருப்பது நமக்கு கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்தவனின் ஆணுறுப்பை சுட்ட போலீஸ் அதிகாரி காயத்ரி என்ற தகவல் பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:சிறுமியிடம் சில்மிஷம் செய்தவனின் ஆணுறுப்பை சுட்ட போலீஸ் அதிகாரி காயத்ரி: ஃபேஸ்புக் வைரல் புகைப்படம்
Fact Check By: Chendur PandianResult: False


