ஆறு ஏழை குழந்தைகளை தத்தெடுத்த கடலூர் ஆசிரியை கயல்விழி! – உண்மை அறிவோம்

அரசியல் | Politics தமிழகம்

கடலூரில் ஆறு ஏழை குழந்தைகளை தத்தெடுத்து அவர்கள் கல்விச் செலவை ஏற்றுக்கொண்ட ஆசிரியை கயல்விழி என்று சீமானின் மனைவி கயல்விழி படத்தை பகிர்ந்துள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி படத்தை பகிர்ந்தள்ளனர். அதன் மீது, “கடலூரில் 6 ஏழை குழந்தைகளை தத்தெடுத்து அவர்கள் கல்வி செலவை ஏற்றுக் கொண்டுள்ள அரசுப் பள்ளி ஆசிரியை கயல்விழி. மனம் இருந்தால் ஷேர் பண்ணி வாழ்த்துங்க” என்று போட்டோஷாப் முறையில் எழுதப்பட்டுள்ளது.

இந்த பதிவை, பச்சை தமிழச்சி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2020 ஜனவரி 15ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழகத்தில் ஏழைக் குழந்தைகளை தத்தெடுத்த ஆசிரியை, சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தத்தெடுத்த ஆசிரியை என்று பல வதந்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தது. அதில், “சேலத்தில் 6 ஏழை குழந்தைகளை தத்தெடுத்து அவர்கள் கல்வி செலவை ஏற்று கொண்டுள்ள அரசு பள்ளி ஆசிரியை லட்சுமி. மனம் இருந்தால் ஷேர் பண்ணி வாழ்த்துங்கள்!” என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த தகவல் தவறானது என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

தற்போது, அந்த பதிவில் சேலம் என்பதை கடலூர் என்று மாற்றி, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி படத்தை வைத்து பகிர்ந்துள்ளனர். இது சீமானின் மனைவி என்று கூட தெரியாமல் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

உண்மையில் இந்த படம் எப்போது எடுக்கப்பட்டது, கயல் விழி என்ன வேலை செய்கிறார் என்று ஆய்வு மேற்கொண்டோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, இந்த படம் 2013ம் ஆண்டு வெளிவந்தது தெரிந்தது. அதில் சீமான் உள்ளிட்டவர்களுடன் கயல்விழி உள்ளார். இதன் மூலம் படத்தில் உள்ளவர் சீமானின் துணைவியார் கயல்விழி என்பது உறுதியானது.

tamil.oneindia.comArchived Link

ஒன் இந்தியா வெளியிட்டிருந்த அந்த செய்தியில், “திருமணம் முடிந்த கையோடு இடிந்தகரைக்கு மனைவியுடன் சென்ற சீமான்” என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்தியில், சீமான் – கயல்விழி ஜோடிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தது முதல், சால்வை அணிவித்து, கேக் வெட்டியது வரை பல படங்கள் இருந்தது. இதிலிருந்து கயல்விழி படத்தை மட்டும் தனியாக எடுத்து விஷமத் தனமாக பதிவிட்டிருப்பது தெரிந்தது.

சீமானின் மனைவி கயல்விழி கடலூரில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்ற தகவல் உண்மையா என்று அறிய நாம் தமிழர் கட்சி செய்தித் தொடர்பாளரை தொடர்புகொள்ள முயன்றோம். நேரடியாக அவரிடம் பேச முடியவில்லை. பத்திரிகை நண்பர் மூலமாக நாம் தமிழர் கட்சி நிர்வாகியைத் தொடர்புகொண்டு பேசினோம்.

 அப்போது அவர், “அண்ணியார் கடலூரில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். தற்போது அவர் ஆசிரியை பணியில் இல்லை. அவர் ஆசிரியையாக பணியாற்றிய போது, ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது உள்ளிட்ட நிறைய சமூக சேவையில் அவர் ஈடுபட்டிருந்தார். தற்போதும் பல சமூக சேவையில் ஈடுபட்டுத்தான் வருகிறார். ஆறு பேருக்கு மட்டுமல்ல… பல ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவி வருகிறார். இவர்கள் இதை தெரிந்து போட்டார்களா, தெரியாமல் போட்டார்களா என்று தெரியவில்லை. இதனால் பிரச்னை ஏதும் இல்லை” என்றார்.

நம்முடைய ஆய்வில்

கயல்விழி கடலூரில் பணியாற்றி வந்ததும் தற்போது அவர் ஆசிரியராக இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

கடலூரில் பணியாற்றிய காலம் முதல் தற்போது வரை அவர் பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், ஆசிரியர் ஒருவர் ஆறு குழந்தைகளை தத்தெடுத்தார் என்று தொடர்ந்து விஷமத்தனமான பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது என்ற நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது.

இப்படி தொடர்ந்து விஷமத்தனமாக பகிரப்படும் பதிவை எடுத்து எடிட் செய்து, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் துணைவி என்பதை மறைத்து இந்த பதிவு வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் உண்மையும் பொய்யும் கலந்து இந்த பதிவு வெளியாகி இருப்பது உறுதியாகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையுடன் தவறான தகவல் சேர்த்தும், மறைத்தும் வெளியிடப்பட்டுள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஆறு ஏழை குழந்தைகளை தத்தெடுத்த கடலூர் ஆசிரியை கயல்விழி! – உண்மை அறிவோம்

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False