
‘’இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் தெருவில் இறந்து கிடக்கும் காட்சி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
இதில், ஏற்கனவே பகிரப்பட்ட ஒரு பதிவின் ஸ்கிரின்ஷாட்டை வெளியிட்டுள்ளனர். ‘’இத்தாலி நாட்டின் இன்றைய சூழ்நிலை, இறந்தவர்களின் உடலைக் கூட எடுக்க முடியாத நிலை,’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இன்றைய சூழலில் உலகம் முழுக்க கொரோனா வைரஸ் (Covid 19 or nCoV 2019) வேகமாகப் பரவி வருகிறது. சீனாவில் முதலில் தொடங்கிய இந்த வைரஸ், உலக நாடுகளை மிரட்டும் அளவுக்கு உருவெடுத்துள்ளதால், உலக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி பலரும் ஃபேஸ்புக்கில் வித விதமான வதந்திகளை பரப்பி மக்களை அச்சுறுத்துவதும் வாடிக்கையாக உள்ளது. அதுபோன்ற ஒன்றுதான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவும்.
இதில் கூறப்பட்டுள்ளதுபோல, இத்தாலியில் கொரோனா வைரஸ் வந்து தெருவில் இப்படி மக்கள் கூட்டமாக இறந்து கிடக்கவில்லை. இந்த புகைப்படம் ஜெர்மனியில் எடுக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி தொடர்புடையதாகும்.
ஹிட்லர் ஆட்சியின்போது, ஃபிராங்க்பர்ட் பகுதியில் உள்ள நாஜி முகாம் ஒன்றில் 528 யூதர்கள் கொல்லப்பட்டனர். அதனை நினைவூட்டும் வகையில், கடந்த 2014ம் ஆண்டு அந்த முகாம் அமைந்திருந்த பகுதியில் ஜெர்மனி மக்கள் தெருவில் இறந்துகிடப்பது போல விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். அப்போது எடுத்த புகைப்படம்தான் இது. இதனை பலர் தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்புடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்பி வருகின்றனர்.

Scmp.com Link | Archived Link |
Ibtimes.co.uk Link | Archived Link |
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதென்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் தெருவில் இறந்து கிடந்தனரா?
Fact Check By: Pankaj IyerResult: False
