
ஐ.நா சபைக்கு அடிக்கடி சென்றுவரும் திருமுருகன் காந்தியிடம் உதவி கேட்டு இருந்தால், எங்களுக்கு இன்று இந்த நிலை வந்திருக்காது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

தந்தி டி.வி வெளியிட்ட இரண்டு நியூஸ் கார்டுகளை ஒன்று சேர்த்துப் பதிவிட்டுள்ளனர். முதல் நியூஸ் கார்டில், “இந்தியாவுக்கு எதிரான கோரிக்கையை நிராகரித்தது, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் – பாக். கோரிக்கை தோல்வி” என்று இருந்தது.
இரண்டாவது நியூஸ் கார்டு ஆகஸ்ட் 16, 2019ம் தேதி வெளியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், “ஐ.நா சபைக்கு அடிக்கடி சென்றுவரும் திருமுருகன் காந்தியிடம் உதவி கேட்டு இருந்தால், எங்களுக்கு இன்று இந்த நிலை வந்திருக்காது – பாக். பிரதமர் இம்ரான் கான்” என்று இருந்தது.
இந்த பதிவை, நாச்சியார் தமிழச்சி என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஆகஸ்ட் 17ம் தேதி வெளியிட்டுள்ளது. ஏராளமானோர் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
திருமுருகன் காந்தி சில முறை ஐ.நா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியுள்ளார். கடந்த முறை நடந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி பேசினார். இதற்காக, இந்தியா திரும்பிய திருமுருகன் காந்தியை தமிழக போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பல முறை திருமுருகன் காந்தி பங்கேற்று பேசியுள்ள நிலையில், அவரிடம் உதவி கேட்டிருந்தால் எங்களுக்கு இந்த நிலை வந்திருக்காது என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியதாக தந்தி டி.வி நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தீவிர வலதுசாரி சிந்தனையாளர்கள் திருமுருகன் காந்தி பற்றி பேசி வருகின்றனர். அவரை கிண்டல் செய்யும் நோக்கில் இந்த பதிவு வெளியிடப்பட்டிருக்கலாம். ஆனால், தந்தி டி.வி லோகோவுடன் செய்தி பகிரப்பட்டுள்ளதால், இது உண்மை என்று நம்பி பலரும் ஷேர் செய்துள்ளது தெரிந்தது. திருமுருகன் பற்றி சமூக ஊடகங்களில் பரவும் எதிர்மறையான பதிவுகளில் ஒன்று கீழே…
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்றுள்ள படத்தை, இரண்டு நியூஸ் கார்டுகளை ஒன்று சேர்த்து தயாரித்துள்ளனர். அதில் முதலாவது நியூஸ் கார்டு உண்மையானது போல இருந்தது. ஆனால், இரண்டாவது கார்டு டிசைன், தமிழ் ஃபாண்ட் வித்தியாசமாக இருந்தது. அதனால், அது பொய்யாக இருக்கலாம் என்று தெரிந்தது. அதை உறுதி செய்ய ஆய்வு மேற்கொண்டோம். முதலில் தந்தி டி.வி ஃபேஸ்புக் பக்கத்தில் அவர்கள் வெளியிட்டுள்ள நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம்.

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவின், முதல் நியூஸ் கார்டு நமக்கு கிடைத்தது. அதாவது, பாக் கோரிக்கை தோல்வி என்று வெளியான நியூஸ் கார்டு தந்தி டி.வி வெளியிட்டது உறுதியானது. இரண்டாவது கார்டை கிடைக்கிறதா என்று தேடினோம்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்பாக நியூஸ் கார்டை தந்தி டி.வி வெளியிட்டதா என்று தேடினோம். அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் நமக்குக் கிடைக்கவில்லை.
ஆகஸ்ட் 16ம் தேதி தந்தி டி.வி வெளியிட்ட வேறு ஒரு நியூஸ் கார்டுடன், இம்ரான் கான் நியூஸ் கார்டை ஒப்பிட்டுப் பார்த்தோம். தமிழ் ஃபாண்ட், நியூஸ் கார்டு டிசைன் உள்ளிட்டவை வழக்கமாக தந்தி டி.வி வெளியிடும் நியூஸ் கார்டுடன் ஒத்துப்போகவில்லை. இதன் அடிப்படையில், இரண்டாவது நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பது உறுதியானது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:திருமுருகன் காந்தி பற்றி பாகிஸ்தான் பிரதமர் பேசியது உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
