
‘’கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய இந்தியாவில் ரூ.4500 வசூலிக்கப்படுகிறது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இதில், மோடியின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் அருகே, கொரோனா பரிசோதனை செய்ய ‘’ஈரான், சீனா, ஐரோப்பியா, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் இலவசமாகவும், பாகிஸ்தான் ரூ.500, வங்கதேசம் ரூ.300 எனவும் வசூலிக்கின்றன. டிஜிட்டல் இந்தியாவில் ரூ.4500 வசூலிக்கப்படுகிறது,’’ என்று எழுதியுள்ளனர்.
இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இவர்கள் கூறுவது உண்மையா என விவரம் தேட தொடங்கினோம். முதலில், கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த சீனாவில் இதுபற்றிய மருத்துவ பரிசோதனை எப்படி செய்யப்படுகிறது என்று பார்த்தோம்.
அப்போது, சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என பரிசோதிக்க மட்டும் குறைந்தபட்சமாக 370 யுவான் (ரூ.4,000) வசூலிக்கப்படுவதாக, தெரியவந்தது. அத்துடன், கொரோனா சிகிச்சைக்கு வயது வந்தவர்கள் எனில் 23,000 யுவான் (ரூ.2,50,000) மற்றும் சிறுவர்கள் எனில் 5,600 யுவான் (ரூ.60,000) செலவாகும் எனவும் கூறப்படுகிறது.
இதுவே அமெரிக்காவில் வேறு விதமாக மருத்துவ கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனினும், அங்கு ஒருவரின் மெடிக்கல் இன்சூரன்ஸ் பாலிசியை பொறுத்தே இந்த செலவு அமைகிறது.
தென்கொரியாவில் அரசு மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பொதுமக்களின் கொரோனா வைரஸ் தொற்று பற்றிய மருத்துவ பரிசோதனை செலவை ஏற்றுக் கொள்கின்றன.
ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருத்துவ பரிசோதனை, சிகிச்சை உள்ளிட்ட அனைத்தையும் அரசே ஏற்றுக் கொள்கிறது.
பிரிட்டனில் தேர்வு செய்யப்பட்ட மக்களுக்கு இலவசமாக கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்துதரப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகள் தங்களது சவுகரியத்திற்கு ஏற்ற மருத்துவ கட்டணத்தை கொரோனா பரிசோதனைக்கு வசூலிக்கின்றன.
இதற்கடுத்தப்படியாக, இலங்கையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்ய சராசரியாக ரூ.6000 வரை செலவாகிறது.
வங்கதேசத்தில் குறைவான விலையில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபற்றி படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
ஈரானில் இந்த பிரச்னை வேறு விதமாக உள்ளது. உலக நாடுகளின் உதவியுடன் அங்கே கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் நடைபெறுகின்றன. இதனை முற்றிலும் இலவசம் எனச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், போதிய வசதிகள் இல்லாமல் ஈரான் பெரும் மருத்துவ நெருக்கடியில் உள்ளது.
பாகிஸ்தானில் தற்போதைக்கு ரூ.7,900க்கு கொரோனா பரிசோதனை செய்து தரப்படுகிறது. ரூ.500க்கு பரிசோதனை செய்வதாகக் கூறப்படுவது தவறான தகவல். எனினும், இந்த பரிசோதனை லாகூர் உள்ளிட்ட சில நகரங்களில் மட்டுமே அரசு மற்றும் தனியாரால் செய்யப்படுகிறது.
இதுவே இந்தியாவில், குறைந்தபட்சமாக, ரூ.1,200 மற்றும் அதிகபட்சமாக ரூ.4,500 வரை கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை இலவசமாக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தும் உள்ளது. எனினும், இதுபற்றி இறுதி முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு ICMR வசம் உள்ளது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) பிரிட்டனில் மட்டுமே கொரோனா பரிசோதனை இலவசமாக செய்து தரப்படுகிறது. மற்ற மேற்கத்திய நாடுகளில் அவரவர் எடுத்துக் கொண்ட மெடிக்கல் இன்சூரன்ஸ் பொறுத்தே கொரோனா பரிசோதனைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
2) மற்ற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் கொரோனா பரிசோதனைக் கட்டணம் குறைவு. இதற்கடுத்தப்படியாக, வங்கதேசம் இதற்கான கட்டணத்தை குறைவான விலையில் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை, பாகிஸ்தானில் கூட கொரோனா பரிசோதனைக் கட்டணம் இந்தியாவைவிட அதிகம்தான்.
3) ஜப்பான், தென்கொரியா போன்ற ஆசிய பசிபிக் நாடுகளிலும் அரசு மற்றும் மெடிக்கல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சார்பாக கொரோனா பரிசோதனைக்கு நிதி உதவி தரப்படுகிறது.
இறுதியாக, ஒரு விசயம். இந்தியாவில், கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தாலோ அல்லது நாம் விரும்பினாலோ, அதற்கான பரிசோதனையை, அரசு மருத்துவமனைகள் இலவசமாக செய்து தருகின்றன. தனியார் மருத்துவமனைகளில்தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் சிறிதளவு உண்மையும், நிறைய பொய்யும் கலந்துள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் நம்பகத்தன்மை இல்லை என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கொரோனா மருத்துவ பரிசோதனை செய்ய உலகிலேயே இந்தியா அதிக கட்டணம் வசூலிக்கிறதா?
Fact Check By: Pankaj IyerResult: Partly False
