
தமிழகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பெருமாள் சிலை செதுக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து பெங்களூருவுக்குக் கொண்டு செல்லப்பட்ட செதுக்கப்படுவதற்கு முந்தைய பிரம்மாண்ட சிலை படங்கள் மற்றும் சிலை செதுக்கப்பட்டு அதற்கு பூஜை செய்யப்படுவது போன்ற படங்கள் பகிரப்பட்டுள்ளன.
நிலைத் தகவலில், “தமிழகத்திலிருந்து பெங்களூர் எடுத்துச் செல்லப்பட்ட ஸ்ரீபெருமாள் சிலை சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Sasikumar Chandran என்பவர் 2020 ஜூலை 13ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
திருவண்ணாமலையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் உள்ள கோதண்டராமர் கோவிலுக்கு பிரம்மாண்ட விஷ்வ ரூப பெருமாள் சிலை அமைக்க கல் கொண்டு செல்லப்பட்டது. அந்த கல்லில் அழகிய சிலை வடித்து கும்பாபிஷேகம் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு சிலைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டுக்கும் வித்தியாசம் தெரிந்தது. திருவண்ணாமலையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட சிலையைப் பார்க்க திருப்பதி வெங்கடாசலபதி ஆசி வழங்குவது போல கைகள் உள்ளன. ஆனால் பூஜை செய்யப்படும் சிலையில் அப்படி இல்லை.
ஈஜிபுராவில் நிறுவப்படும் சிலை திறப்பு விழா பூஜை நடத்தப்பட்டதா என்று தேடியபோது, அதுபோல எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் ஈஜிபுராவில் அமைக்கப்படுவது விஷ்வ ரூப காட்சி என்று மாதிரி புகைப்படங்கள் கிடைத்தன. ஆனால் இந்த சிலை வித்தியாசமாக இருந்தது.

சில மாதங்களுக்கு முன்பு சிலை அமைப்பு தொடர்பாக வெளியான ஒரு வீடியோ கிடைத்தது. அதில் பெருமாளின் தலைக்கு அருகே மற்ற கடவுளர்களின் தலைகள் செதுக்கும் பணி நடந்து வருவதைக் காண முடிந்தது.
மேலும், ஈஜிபுராவில் அமைக்கப்பட்டுள்ள பெருமாள் சிலைக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக பரவும் வதந்தி என்று நியூஸ் 18 வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதில் தகவல் தவறானது என்று குறிப்பிட்டிருந்தார்களே தவிர, இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை.
எனவே, இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்று தேடினோம். ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. ஒரு படத்தில் இந்தியில் ஏதோ எழுதப்பட்டு இருந்தது. நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்திப் பிரிவைத் தொடர்புகொண்டு படத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று கேட்டோம். அப்போது ‘சேகர் பஜாஜ் அவர்களுக்கு நன்றி என்று எழுதப்பட்டுள்ளது,’ என்றனர்.
இதன் அடிப்படையில் வேறு வேறு கீ வார்த்தைகளை பயன்படுத்தி வேறு வேறு தேடு பொறிகளில் தேடினோம். யாகூ தேடுதல் இன்ஜினில் தேடியபோது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படம் பற்றிய சிறு தகவல் கிடைத்தது.
அதில், உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் கோவர்த்தன மலையில் அமைக்கப்பட்டுள்ள பலராமன் சிலை என்று இருந்தது. அதன் அடிப்படையில் தேடியபோது நமக்கு இதுதொடர்பான புகைப்படங்கள் கிடைத்தன.
arjuna-vallabha.tumblr.com | Archived Link 1 |
asian-voice.com | Archived Link 2 |
groundrealitynb.blogspot.com | Archived Link 3 |
2017ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி இந்த புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. பிரம்மாண்ட சிலை, அதற்கு பூஜை செய்யும் காட்சி அனைத்தும் அதில் இருந்தது. Brajfoundation என்ற அமைப்பு அந்த பகுதியில் உள்ள குளத்தை சீரமைத்து இந்த சிலையை நிறுவியதாக செய்தி மற்றும் வீடியோ நமக்கு கிடைத்தன. அந்த தொண்டு நிறுவனத்தைப் பற்றி ஆய்வு செய்தபோது, பஜாஜ் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அதற்கு நிதி உதவி செய்வது தெரிந்தது.
இதன் மூலம் உ.பி-யில் 2017ல் அமைக்கப்பட்ட பலராமன் சிலை படத்தை பெங்களூருவில் அமைக்கப்பட்ட விஸ்வரூப பெருமாள் சிலை என்று தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:தமிழகத்தில் இருந்து பெங்களூரு எடுத்துச் செல்லப்பட்ட பெருமாள் சிலைக்கு கும்பாபிஷேகமா?
Fact Check By: Chendur PandianResult: False
