
சீனாவில் யாங்சே நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

சாலையில் ஆர்ப்பரித்து வரும் வெள்ள நீர் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சீனாவில் யாங்சே நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊரை கபளீகரம் செய்யும் காட்சி. வாட்ஸ்அப் மூலம் வந்தது. பழைய செய்திதான் எனினும் பிரமிக்க வைக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை Tiruppur News1 என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஆகஸ்ட் 25ம் வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வீடியோவைப் பார்க்கும்போது சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி காட்சி போல உள்ளது. சீன ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு என்று குறிப்பிட்டுள்ளதால் இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, சுனாமியின் ஆற்றல், ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி என்று பல வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. அது மட்டுமின்றி இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமி என்றும், இந்தியாவில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு என்றும் கூட சிலர் பகிர்ந்திருப்பதைக் காண முடிந்தது.
தொடர்ந்து தேடிய போது 2011 மார்ச் 11ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி என்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட காட்சியோடு ஒரு இணையதளத்தில் செய்தி வெளியாகி இருந்தது. அதனுடன், யூடியூப் வீடியோ பதிவும் இருந்தது. அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட காட்சி அப்படியே இருந்தது. அந்த வீடியோவில் 2011 மார்ச் 11 என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தனர்.

இது ஜப்பானில்தான் எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய அதில் குறிப்பிடப்பட்டு இருந்த இஷினோமகி சிட்டி (Ishinomaki city) சுனாமி என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வீடியோவை பலரும் யூடியூபில் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.
அந்த இணையதளத்திலேயே அந்த இடத்தின் கூகுள் மேப் லிங்கை கொடுத்திருந்தனர். ஆனால் அது அந்த கட்டுரை வெளியான போது எடுக்கப்பட்ட மேப். எனவே, அதே இடத்தை கூகுள் மேப்பில் தேடினோம். கூகுள் ஸ்ட்ரீட் படங்கள் கிடைத்தன.

அதில் மூன்று நீளமான நீலநிற சிலிண்டர் அதன் அருகில் உருண்டையான தொட்டி போன்ற அமைப்பு உள்ளிட்டவை இருந்தன. வீடியோவின் 2.50 நிமிடத்தில் வரும் காட்சியும், கூகுள் ஸ்ட்ரீட் இமேஜில் கிடைத்த காட்சியும் ஒன்றாக இருப்பதை காண முடிகிறது. எனவே, இந்த வீடியோ இந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.

நம்முடைய ஆய்வில், இந்த வீடியோ 2011ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி பாதிப்பின் போது எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சீனாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சீனாவில் யாங்சே நதி வெள்ளப் பெருக்கு என்ற பெயரில் பரவும் ஜப்பான் சுனாமி வீடியோ!
Fact Check By: Chendur PandianResult: False
