
‘’தனது சொந்த சாராய ஆலையை கனிமொழி மூடுவாரா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

காலத்தின்குரல் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை கடந்த மே மாதம் 26ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காளியம்மாள் மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகியோரின் புகைப்படங்களை இணைத்து, அதன் மேலே, ‘’60,575 வாக்குகள் பெற முடிந்த காளியம்மாவால் விருதுநகரில் ஒரு சாராயக்கடையை மூட முடிந்தது, 5,63,143 வாக்குகளைப் பெற்ற கனிமொழியால் தனது சொந்த சாராய ஆலையை மூட முடியுமா?,’’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
இவர்கள் எழுப்பும் கேள்வியே முதலில் அடிப்படை ஆதாரமற்ற கேள்வியாகும். ஏனெனில், அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் பற்றி அவர்களின் எதிர்க்கட்சியினர் ஏதேனும் தகவல்களை கிளப்பி விடுவதும், அதையே பலர் உண்மை என நம்பி பேச தொடங்குவதும் போன்றதுதான் இந்த வதந்தியும்.
இப்படி முதன்முதலாகக் குற்றச்சாட்டை முன் வைத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆவார். அவருக்கும், கருணாநிதிக்கும் மிடாஸ் மதுபான ஆலை தொடர்பாக நடைபெற்ற அறிக்கைப் போரின் விளைவாக, ஒருமுறை, அவர் கனிமொழி, ஸ்டாலின் போன்றோர் சொந்தமாக சாராய ஆலை வைத்து, ரகசியமான இடத்தில் நடத்தி வருவதாக அறிக்கை வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அப்போது உயிருடன் இருந்த திமுக தலைவர் கருணாநிதியும் இதனை மறுத்து, விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், எந்த இடத்தில், கனிமொழி, ஸ்டாலினுக்குச் சொந்தமான சாராய ஆலை உள்ளது என்று கூறும்படியும் அவர் ஜெயலலிதாவை வலியுறுத்தியிருந்தார். அதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுதவிர, 2016ம் ஆண்டில், சட்டமன்ற தேர்தல் நேரத்தில், செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, தனக்கும், இதர திமுக.,வினருக்கும் சாராய ஆலை உள்ளதாகக் கூறப்படும் தகவலை முற்றிலுமாக மறுத்திருந்தார். அப்படி ஒருவேளை திமுக.,வினர் யாரேனும் மது ஆலை நடத்தினால், அவற்றை மூட நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
ஒருவேளை கனிமொழி இப்படி சாராய ஆலை நடத்தி வருகிறார் எனில், அந்த விசயம் எப்போதே வெளியில் கசிந்திருக்கும். குறிப்பாக, தற்போது எஸ்ஆர்எம் குழும தலைவர் பச்சமுத்து தொழிலதிபராகவும், அதேசமயம் அரசியல்வாதியாகவும் உள்ளார். இதுபோன்று தொழில் செய்துகொண்டு, அரசியல் செய்பவர்கள் பலரும் உள்ளனர். ஆனால், கனிமொழி அப்படியான பின்னணி கொண்டவர் இல்லை. அவர் அடிப்படையிலேயே கலை இலக்கிய ஆர்வலர், எழுத்தாளர், பெண் உரிமைச் செயற்பாட்டாளர், அரசியல்வாதி என்கிற ரீதியில்தான் செயல்பட்டு வருகிறார். மாறன் சகோதரர்கள் சன் டிவி நடத்திக்கொண்டே திமுக.,வில் செல்வாக்கு செலுத்துவது போல ஒருவேளை கனிமொழி சாராய ஆலை சொந்தமாக வைத்திருக்கிறார் எனில், அது மிகப்பெரிய விவாதத்திற்கு உரிய விசயமாக மாறியிருக்கும்.
எதிர்க்கட்சியினர் எழுப்புகிற விசயங்களை உண்மைபோல நம்பி பகிரப்பட்ட வதந்தியாகத்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உள்ளது. எனவே, இது தவறான தகவல் என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்றென நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோக்களை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கனிமொழி சொந்தமாக சாராய ஆலை வைத்துள்ளார்: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு
Fact Check By: Parthiban SResult: False
