
‘’ரெய்டுக்கு பயந்து அண்ணா சமாதியில் தர்ம யுத்தம் செய்த எம்ஜிஆர்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Mathi Dmk என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை 15, ஏப்ரல் 2018 அன்று வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் எம்ஜிஆர் சமாதி ஒன்றின் முன்பு அமைதியாக அமர்ந்திருக்க, அவருடன் அவரது மனைவி ஜானகி உள்ளிட்டோர் நிற்பதை காண முடிகிறது. இதில், ‘’ரெய்டுக்கு பயந்து அண்ணா சமாதியில் தர்மயுத்தம் செய்த திமுக பொருளாளர் எம்ஜிஆர்,’’ என்று எழுதியுள்ளார். புகைப்படத்தின் மீது, ‘’இப்ப தெரியுதா சமாதி முன்னாள் உட்கார்ந்து தியானம் பண்ற வேலையை யார் தொடங்கி வச்சதுன்னு?’’, என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
முதலில் மேற்கண்ட புகைப்படத்தை Yandex இணையதளத்தில் பதிவேற்றி தகவல் தேடினோம். அப்போது ஒரிஜினல் புகைப்படம்தான் என விவரம் கிடைத்தது. ஆனால், இதுபற்றி வேறு எந்த விவரமும் தெரியவில்லை.
இதையே கூகுளில் பதிவேற்றி தகவல் தேடியபோது, சில செய்தி ஆதாரங்கள் கிடைத்தன.

இந்த புகைப்படத்தை ட்விட்டரில் வர்த்தக சங்க நிர்வாகி ஒருவர் வெளியிட்ட பதிவின் விவரம் கிடைத்தது. அதில், இதே புகைப்படத்தை அந்த பதிவை பகிர்ந்திருந்தார்.
இதுதவிர, இந்த புகைப்படம் பற்றி யூடர்ன் என்ற இணையதளம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி அந்த முடிவுகளை வெளியிட்ட விவரமும் கிடைத்தது. அந்த செய்தியை படித்தபோது, இது எம்ஜிஆர் டெல்லியில் உள்ள காந்தி சமாதி சென்றிருந்தபோது எடுத்த புகைப்படம் என கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, எம்ஜிஆர், டெல்லிக்கு என்றேனும் சென்றிருகிறாரா என்ற கோணத்தில் தகவல் தேட தொடங்கினோம். அப்போது, MGR என்ற ஃபேஸ்புக் ஐடி பகிர்ந்திருந்த பதிவின் விவரம் கிடைத்தது. அதில் நாம் சந்தேகத்திற்கான விடையும் தரப்பட்டிருந்தது.

இந்த ஃபேஸ்புக் ஐடி நம்பகமான ஒன்றா என தேடிப் பார்த்தோம். அப்போது, இது எம்ஜிஆர் ரசிகர் ஒருவரால் நிர்வகிக்கப்படும் ஃபேஸ்புக் பக்கம் என்ற விவரம் கிடைத்தது. அத்துடன், இதில் எம்ஜிஆர் பற்றி வெளியே தெரியாத பல விசயங்களும் பதிவிடப்பட்டிருந்தன. இந்த ஐடியின் விவரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

இதுதொடர்பாக மேலும் தகவல் தேடியபோது, தி இந்து வெளியிட்ட செய்தி ஒன்றின் விவரம் கிடைத்தது. அதில், அன்பே வா என்ற படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க அவர், டெல்லி வழியாக, ஷிம்லா சென்றிருந்ததாக, தகவல் தெரியவந்தது. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதன்பேரில் வேறு ஏதேனும் தகவல் ஆதாரம் கிடைக்குமா என தேடினோம். அப்போது, Blogspot ஒன்றில் அன்பே வா பட ஷூட்டிங்கில் பங்கேற்க சென்றபோது எம்ஜிஆர், நேரு மற்றும் காந்தி சமாதியை நேரில் பார்த்தார் என்றும், காந்தி சமாதியில் சில நிமிடங்கள் அமர்ந்து மவுன அஞ்சலி செலுத்தினார் என்றும் கூறப்பட்டிருந்தது. இதுபற்றி மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இவர்கள் குறிப்பிடும் 1972ம் ஆண்டில், எம்ஜிஆர், திமுக.,வில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் அஇஅதிமுக.,வை தொடங்கினார் என்பதும் வரலாறு அறிந்த உண்மைதான். இதுபற்றி விகடன் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில்,
எம்ஜிஆர் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்கு சென்றிருந்தபோது எடுத்த புகைப்படத்தை வைத்து தவறான தகவலை பகிர்ந்துள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ரெய்டுக்கு பயந்து அண்ணா சமாதியில் தர்ம யுத்தம் நடத்திய எம்ஜிஆர்: ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Pankaj IyerResult: False
