குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மோடியின் மனைவி பங்கேற்றாரா?
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென் என்று ஒரு செய்தியை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
மோடியின் மனைவி யசோதா பென் போன்ற ஒருவர் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "மோடிக்கு எதிராக போராடும் மோடியின் மனைவி. இது தேவயா" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை செய்யது அபுதாஹீர் என்பவர் 2020 ஜனவரி 22ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
இந்த பதிவை, Kumari Vinsar Dmk என்பவர் 22 ஜனவரி 2020 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் மோடியின் மனைவி யசோதா பென் பங்கேற்றாரா என்று அது தொடர்பாக செய்தி ஏதும் உள்ளதா என்று தேடினோம். அப்படி இது தொடர்பாக பரவும் வதந்திகள் பற்றிய செய்திகள் கிடைத்தன. சமூக ஊடக பக்கங்களில் தேடியபோது, மாலை மலர் லோகோவோடு நிறைய பதிவுகள் பகிரப்பட்டு வந்தது தெரிந்தது.
மாலை மலர் கேள்விக் குறியோடு செய்தி வெளியிட்டுள்ளது. உண்மையில் மாலை மலர் அந்த செய்தியை வெளியிட்டதா என்று பார்த்தோம். மாலை மலர் இணையதளத்துக்கு சென்று பார்த்தபோது, நமக்கு அந்த செய்தி கிடைத்தது.
தலைப்பில் கேள்விக் குறியை வைத்திருந்தனர். லீட் பகுதியில், "குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்ட களத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி கலந்து கொண்டதாக தகவல் வைரலாகியுள்ளது" என்று குறிப்பிட்டிருந்தனர். செய்தியைப் படித்துப் பார்த்தோம். அது சமூக ஊடகங்களில் பரவும் தகவல் உண்மையா என்று வெளியான செய்தி என்று தெரிந்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் யசோதா பென் பங்கேற்றார் என்று பகிரப்படும் செய்தி தவறானது என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.
maalaimalar.com | Archived Link |
இந்த புகைப்படம் 2016ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்த மாலை மலர், அதற்குண்டான எந்த ஒரு ஆதாரத்தையும் அந்த கட்டுரையில் அளிக்கவில்லை. எனவே, அந்த படம் எங்கே, எதற்காக எடுக்கப்பட்டது என்று ஆதாரத்தைத் தேடினோம். அப்போது 2016ம் ஆண்டு மும்பையில் குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கான போராட்டம் ஒன்றில் யசோதா பென் கலந்துகொண்டது தொடர்பான பல செய்திகள் கிடைத்தன. மழைக் காலங்களில் குடிசைப் பகுதிகள் இடிக்கப்படுவதைக் கண்டித்து போராட்டம் நடந்ததாக 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி வெளியான செய்திகள் கிடைத்தன.
theweek.in | Archived Link |
தமிழில் அது தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்ததா என்று பார்த்தோம். அப்போது, இதே படத்தை 2016ம் ஆண்டு தினமலர் உள்ளிட்ட பல ஊடகங்கள் வெளியிட்டிருந்தது தெரியவந்தது. அதே போல் கடந்த ஜனவரி 20ம் தேதியே நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் பிரிவு இது தொடர்பான செய்தி வெளியிட்டிருந்தது தெரிந்தது.
malayalam.factcrescendo.com | dinamalar.com | Archived Link |
நம்முடைய ஆய்வில்,
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் யசோதா பென் பங்கேற்றார் என்று வதந்தி பரவுகிறது என்று மாலை மலர் செய்தி வெளியிட்டது தெரியவந்துள்ளது.
2016ம் ஆண்டு மும்பையில் குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கான போராட்டத்தில் யசோதா பென் கலந்துகொண்டபோது எடுத்த படம் இது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2016ல் தினமலர் உள்ளிட்ட ஊடகங்களில் செய்தி வெளியாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் பிரிவு இது தொடர்பான கட்டுரையை வெளியிட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், "குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் பங்கேற்றார்" என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மோடியின் மனைவி பங்கேற்றாரா?
Fact Check By: Chendur PandianResult: False