
தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான் என்கவுண்டர் நடந்தது என்று பா.ரஞ்சித் கூறியதாக, ஐதராபாத் என்கவுண்டர் சம்பவத்துக்கு சாதி சாயம் பூசும் வகையில் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
திரைப்பட காட்சியை வைத்து பதிவிட்டுள்ளார்கள். அதில், “தலித் சமூகம் என்பதால்தான் அவர்கள் மீது என்கவுன்டர் பாய்ந்தது – ப.ரஞ்சித்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, Suresharun Suresh என்பவர் 2019 டிசம்பர் 6ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஐதராபாத்தில் கால் நடை மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் இருந்து கருத்து வந்துகொண்டே இருந்தது. இந்த நிலையில், அவர்கள் 4 பேரும் தப்பிச் செல்ல முயன்றபோது என்கவுண்டர் செய்யப்பட்டனர்.
இதுபற்றி பலரும் பலவித கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். “அவர்கள் குற்றம் செய்தார்கள் என்பதை நிரூபித்துத் தூக்கு தண்டனை வழங்கியிருந்தால் கவலைப்பட்டிருக்க மாட்டோம். ஆனால், நிரூபிக்காமலேயே அவர்களை கொன்றுவிட்டார்கள்” என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் கூறுகிறார்கள். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், அதை சட்டப்பூர்வமாக வழங்க வேண்டும் என்று ஒரு சிலரும், என்கவுண்டர் செய்ததை தவறு என்று கூறுபவர்களை விமர்சித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர். எது சரி, எது தவறு என்ற விவாதத்துக்குள் செல்லவில்லை.
இந்த பதிவில், “தலித் சமூகம் என்பதால்தான் அவர்கள் மீது என்கவுண்டர் பாய்ந்தது – பா.ரஞ்சித்” என்று குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
ராஜ ராஜ சோழன் பற்றி பா.ரஞ்சித் பேசியது முதல் அவரைப் பற்றி தொடர்ந்து சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்தபோது கூட அவரைப் பற்றி நிறைய பேர் வதந்தி பரப்பினர். அது தவறு என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் ஆய்வு செய்து வெளியிட்டிருந்தோம்.
ஐதராபாத் என்கவுண்டர் பற்றி பா.ரஞ்சித் பேட்டி, கருத்து ஏதும் தெரிவித்துள்ளாரா என்று கூகுளில் தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அவருடைய ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம், அது பற்றி அவர் எந்த ஒரு கருத்தையும் பதிவு செய்யவில்லை.

Search Link | Twitter Archived Link |
இது குறித்து கருத்து அறிய பா.ரஞ்சித்தை தொடர்புகொள்ள முயற்சித்தோம். அவர் சார்பில் அவருடைய பி.ஆர்.ஓ குணா நம்மிடம் பேசினார். “இந்த தகவல் தவறானது. ஐதராபாத் என்கவுண்டர் பற்றி பா.ரஞ்சித் எந்த ஒரு அறிக்கையோ, ட்வீட்டோ, பேட்டியோ அளிக்கவில்லை” என்றார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஐதராபாத் என்கவுண்டர் விவகாரத்துக்கு சாதி சாயம் பூச முயற்சிக்கும் வகையில் “தலித் என்பதால் என்கவுண்டர் பாய்ந்தது என்று பா.ரஞ்சித் கூறினார்” என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தலித் என்பதால் என்கவுண்டர் பாய்ந்தது! – பா.ரஞ்சித் கூறியதாக பரவும் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False
