
மகரஜோதிக்கு மனைவி மற்றும் சில பெண்களோடு சபரிமலைக்கு செல்வேன் என்று சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் படத்துடன் கூடிய நியூஸ் 7 நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பியூஸ் மனுஷ் அதிரடி. மகரஜோதிக்கு என் மனைவி மற்றும் சில பெண்களோடு சபரிமலைக்கு செல்வேன் – சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் அதிரடி” என்று உள்ளது. எப்போது இந்த நியூஸ் கார்டு வெளியானது என்ற தகவல் இல்லை.
இந்த பதிவை, Gopal Krishna என்பவர் 2019 நவம்பர் 17ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சபரி மலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவில், தற்போதைய நிலை தொடரும் என்று தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட கட்சிக்கு எதிரானவர்கள் பற்றி சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.
மகரஜோதிக்கு தி.மு.க மகளிர் அணியுடன் சபரிமலைக்கு செல்ல உள்ளேன் என்று தி.மு.க எம்.பி கனிமொழி கூறியதாக இதேபோன்ற நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதை கனிமொழி தரப்பில் மறுத்திருந்தனர். மேலும், கனிமொழி அவ்வாறு கூறினார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை, இது தவறான தகவல் என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
கனிமொழி கூறியதாக பகிரப்பட்டது போலவே ஒரு நியூஸ் கார்டு தற்போது சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கூறியதாக பகிரப்பட்டு வருகிறது. சௌகரியமாக நியூஸ் கார்டில் உள்ள தேதியை மறைத்துவிட்டனர். 2019 மார்ச் மாதம் என்பது மட்டுமே நியூஸ் கார்டில் தெரிகிறது. அதாவது சபரி மலை மகரஜோதி முடிந்து இரண்டு மாதங்கள் கழித்த நிலையில், அடுத்த மகரஜோதிக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கிய நேரத்தில் இந்த நியூஸ் கார்டு வெளியானது போல குறிப்பிட்டுள்ளனர்.
உண்மையில் அவ்வாறு பியூஷ் மனுஷ் கூறினாரா, இது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை… ஒருவேளை பியூஷ் அவ்வாறு கூறியிருந்தால் தீவர வலது சாரி இதழ்களிலாவது அது தொடர்பான செய்தி வெளியாகி இருக்கும். ஆனால், ஒரு பிட் செய்தி கூட நமக்கு கிடைக்கவில்லை.

Search Link |
இந்த நியூஸ் கார்டும் அசல் போலத் தெரியவில்லை. நியூஸ்7 தமிழ் வெளியிடும் நியூஸ் கார்டை எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தோம். அதில், தமிழ் ஃபாண்ட், வாட்டர் மார்க் லோகோ உள்ளிட்டவை வித்தியாசமாக இருந்தது. இதை உறுதி செய்ய, நியூஸ்7 தொலைக்காட்சியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது இது போலியானது என்று அவர்கள் உறுதி செய்தனர்.
வேறு ஏதாவது இடத்தில் பியூஷ் மனுஷ் அவ்வாறு கூறினாரா என்று அறிந்துகொள்ள அவரைத் தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது அவர், “இது முழுக்க போலியான ஒன்று. ஓராண்டாக இதை பரப்பி வருகின்றனர்” என்றார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “சபரிமலை மகரஜோதியை காண என் மனைவியுடன் செல்வேன்” என்று பியூஷ் மனுஷ் கூறியதாக வெளியான நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மனைவியோடு சபரிமலைக்கு செல்வேன்: பியூஷ் மனுஷ் பெயரில் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
