
‘’புரி ஜெகந்நாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி தடுத்து நிறுத்தப்பட்டனர்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் வைரல் செய்தியின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
Arumugam Bhel என்பவர் ஜூன், 30, 2018 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இதில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் வெளியிடப்பட்ட செய்தி எனக் கூறி, ஒடிசா புரி ஜெகந்நாதர் கோயிலுக்குள் செல்ல முயன்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும், அவரது மனைவியையும் பார்ப்பன அர்ச்சகர்கள் பிடித்து தள்ளிவிட்டனர் என்றும், வெளியில் நின்றபடியே சாமி தரிசனம் செய்தனர் என்றும், எழுதியுள்ளார். இதே செய்தியை மேலும் பலரும் உண்மை என நினைத்து ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இவர்கள் குறிப்பிடுவதுபோல உண்மையிலேயே குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் புரி ஜெகந்நாதர் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லையா என்ற சந்தேகத்தில் ஆதாரம் தேடினோம். அப்போது, நிறைய ஆங்கில ஊடகங்கள் இதே செய்தியை வெளியிட்டிருந்த விவரம் கிடைத்தது.
தமிழிலும் பல முன்னணி ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டிருந்தன.
IE Tamil Link | Archived Link |
Vikatan News Link | Archived Link |
அதேசமயம், பலர் இதனை தவறு என்றும் உண்மை கண்டறியும் சோதனை செய்திருந்த விவரமும் கிடைக்கப் பெற்றது.
IndiaToday Link | The Hindu Link | Economic Times Link |
உண்மையில், குடியரசுத் தலைவருக்கோ, அவரது மனைவிக்கோ எந்த அவமரியாதையும் நிகழவில்லை என, புரி ஜெகந்நாதர் கோயில் அர்ச்சகர்கள் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர்.
The Hindu Tamil Link | Archived Link |
தவிர, இவர்கள் குறிப்பிடுவது போல, குடியரசுத் தலைவரும், அவரது மனைவியும் வெளியில் நின்றபடி கருவறை தரிசனம் செய்தனர் என பகிரும் புகைப்படமும் தவறானது. உண்மையில், அவர்கள் கோயிலை விட்டு வெளியே வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது. அதன் முழு வீடியோ கீழே தரப்பட்டுள்ளது. அதனை பார்த்தால் உங்களுக்கே உண்மை புரியும்.
மேலும், குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கோயில் அர்ச்சகர்கள் யாரேனும் ஊடுருவியிருக்கலாம் அல்லது குடியரசுத் தலைவருக்கு மிக நெருக்கமாக அவர்கள் சென்றிருக்கலாம் என்றுதான் சந்தேகிக்கப்படுகிறது. ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பகிரப்படும் வதந்தியை தொடர்ந்து, உண்மையிலேயே கடந்த ஜூன், 2018 காலக்கட்டத்தில் குடியரசுத் தலைவர் வருகையின்போது என்ன நடந்தது என்பது பற்றி விசாரிக்க, கோயில் நிர்வாகமே தனிக்குழு ஒன்றை அமைத்தும் உள்ளது. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுதவிர, குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து எந்த புகார் கடிதமும் புரி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்படவில்லை. அதுவும் தவறான தகவலாகும். இதுகுறித்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
பல்வேறு தரப்பிலும் இவ்வாறான வதந்தி தொடர்ந்து பகிரப்பட்டு வருவதால், இந்தியா டுடே ஊடகம் இதுபற்றி குடியரசுத் தலைவரின் செய்திப் பிரிவு பொறுப்பாளர் அசோக் மாலிக் விளக்கம் அளித்திருக்கிறார். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், கடந்த ஆண்டு ராம்நாத் கோவிந்த் புரி ஜெகந்நாதர் கோயிலுக்குச் சென்றபோது, அவரது பாதுகாப்பு வளையத்தை மீறி, சில கோயில் அர்ச்சகர்கள் அவரின் அருகே சென்றது உண்மைதான். இதுபற்றி கோயில் நிர்வாகம் விசாரிக்கிறது. ஆனால், இதன் உண்மைத்தன்மையை மறைத்து, குடியரசுத் தலைவரை யாரோ தள்ளிவிட்டதாக, ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டுள்ளதாக, தெரியவருகிறது. அத்துடன், குடியரசுத் தலைவர் மாளிகை புரி மாவட்ட ஆட்சியரிடம் இதுபற்றி எந்த விளக்கமும் கோரவில்லை.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் தகவல் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:புரி ஜெகந்நாதர் கோயிலில் தடுத்து நிறுத்தப்பட்டாரா குடியரசுத் தலைவர்?
Fact Check By: Pankaj IyerResult: False
