
‘’மோடி ஆட்சியில் பருப்பு விலை பாதியாகக் குறைந்துவிட்டது,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

நாச்சியார் தமிழச்சி என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை மார்ச் 21, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், பாஜக ஆட்சியில் விலைவாசி கூடிபோச்சுனு சொன்னவன்லாம் இதுக்குப் பதில் சொல்லு, என்று கூறி, ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், சேலம் செவ்வாய்ப்பேட்டை மளிகை மற்றும் ஷாப் வர்த்தக நல சங்கம் சார்பான லெட்டர் பேடில், 20-03-2019 தேதியிட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளின் விபரம் என்று அச்சிட்டுள்ளனர். 2014 வரை உச்சத்தில் இருந்த பருப்பு விலை, மோடி ஆட்சிக்கு வந்தபின் படிப்படியாகக் குறைந்து, 2019ல் பாதி அளவுக்கு உள்ளதென்று, குறிப்பிட்டுள்ளனர்.
இதனை பலரும் உண்மையென நம்பி வைரலாக ஷேர் செய்துவருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவிலேயே, இது தவறான தகவல் என்று கூறி, சிலர் கமெண்ட் பகிர்ந்துள்ளனர். அதில் ஒரு கமெண்டை இங்கே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

இதன்படி, மேற்கண்ட செய்தியை கிளிக் செய்து, பார்த்தோம். அது, தி இந்து இணையதளம் 2015, அக்டோபர் 19ம் தேதி வெளியிட்ட செய்தியாகும். அதனையே பின்னர், 2016ம் ஆண்டு தி இந்து அப்டேட் செய்திருந்தது. அந்த செய்தியில், துவரம்பருப்பு விலை கிலோவுக்கு, ரூ.200 வரை உயர்ந்துவிட்டதாகக் கூறப்பட்டிருந்தது. இதன்படி பார்த்தால், 2014ல் மோடி ஆட்சிக்கு வந்தபின், பருப்பு விலை ஏற்றம் காண தொடங்கிவிட்டதாக தெரிகிறது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதையடுத்து, வேறு யாரேனும் இதுதொடர்பாக செய்தி வெளியிட்டார்களா என தேடிப் பார்த்தோம். அப்போது, 2014 வரை இயல்பாக இருந்த பருப்பு விலை திடீரென, 2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தல் காரணமாகவும், பின்னர் விளைச்சல் குறைந்ததன் காரணமாகவும் தாறுமாறாக விலை உயர தொடங்கியதாக, தெரியவந்தது. இதுபற்றி பிபிசி வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். அதாவது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் சராசரியாக, 70 ரூபாய் முதல், 90 ரூபாய் வரை விற்கப்பட்ட பருப்புகள், மோடி ஆட்சிக்கு வந்த பின், 2014 முதலாக, கிடுகிடுவென உயர்ந்து, 2015ம் ஆண்டில் கிலோ ரூ.200க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

ஆட்சிக்கு வந்ததுமே பருப்பு விலை தாறு மாறாக உயர்ந்ததால், மோடி அரசு புதிய நடவடிக்கைகளை கொண்டுவந்ததாக தெரிகிறது. அத்துடன், வட மாநிலங்களில் பருப்பு விளைச்சல் அதிகரித்த காரணத்தால், 2016ம் ஆண்டு பருப்பு விலை மீண்டும், சராசரியாக, 90 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை குறைந்ததாக தெரிகிறது. இதுபற்றி மாலைமலர் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதே நிலை 2017ம் ஆண்டிலும் காணப்பட்டிருக்கிறது. இதுபற்றி தினமணி வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். பின்னர், 2018ம் ஆண்டில் மேலும் சற்று பருப்பு விலை குறைந்து, விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி தினமலர் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இறுதியாக, மத்திய அரசு தரப்பில் ஏதேனும் புள்ளிவிவரங்கள் ஒப்பீட்டிற்கு கிடைக்குமா என தேடினோம். அப்போது, 2011 முதல் 2019 வரையான காலத்தில் இந்தியாவில் பருப்பு விலை எப்படி ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது என்பதற்கான சராசரி புள்ளிவிவரம் கிடைத்தது. அதிலும், 2010 முதல் 2014 வரை இயல்பாக இருந்த பருப்பு விலை, 2014 முதல் 2017 வரை கிடுகிடுவென உயர்ந்தும், பிறகு சரிந்தும் என ஏற்ற, இறக்க நிலையுடன் காணப்படுவதாக, மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் வெளியிட்ட விவரத்தில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி பார்த்தால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்ததைவிட, 2014 முதல் 2019 வரையான மோடி அரசின் காலத்தில் பருப்பு விலை அதிகரித்து இருப்பதாக தெரியவருகிறது.
யாரோ ஒரு பாஜக ஆதரவாளர் இப்படி குழப்பம் ஏற்படுத்தும் வகையில், வியாபாரிகளின் பெயரில் ஒரு தவறான விலைப் பட்டியலை எடுத்து வெளியிட்டிருக்கிறார் என தெரிகிறது.
முடிவு:
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, மோடி ஆட்சியில் பருப்பு விலை பாதியாகக் குறைந்துள்ளது எனக் கூறப்படும் தகவல் தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தவறான செய்திகள், படங்கள் மற்றும் வீடியோவை நமது வாசகர்கள் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மோடி ஆட்சியில் பாதியாகக் குறைந்த பருப்பு விலை: குழப்பம் தரும் செய்தி
Fact Check By: Pankaj IyerResult: False
