
‘’ஜாதி மத பேதம் இல்லாமல் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதில் முதல் மாவட்டமாக ராமநாதபுரம் உள்ளது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
இந்த பதிவில் ராமநாதபுரம் ரயில் நிலைய புகைப்படத்தை பகிர்ந்து, ‘’தமிழகத்தில் ஜாதி, மத பேதம் இல்லாமல் ஒற்றுமையாக மக்கள் வாழும் மாவட்டமாக முதல் இடத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தேர்வு,’’ என்று எழுதியுள்ளனர். இது பார்க்க, நியூஸ் 7 தொலைக்காட்சி பகிர்ந்த உண்மையான நியூஸ் கார்டு என்பது போல உள்ளது. எனவே, இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையா என்ற சந்தேகத்தில் நியூஸ் 7 தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் (@news7tamil) தகவல் தேடினோம். ஆனால், இதுபோன்ற எந்த செய்தியும் நியூஸ் 7 தொலைக்காட்சி வெளியிடவில்லை என்று தெரியவந்தது.
இதையடுத்து, இந்த நியூஸ் கார்டு பற்றி, சம்பந்தப்பட்ட நியூஸ் 7 தொலைக்காட்சியின் ஆன்லைன் பிரிவை தொடர்பு கொண்டு விசாரித்தோம். அப்போது, ‘’இது நியூஸ் 7 பெயரை தவறாகப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போலி நியூஸ் கார்டு, 2017ம் ஆண்டில் நியூஸ் 7 வெளியிட்ட ஒரு நியூஸ் கார்டு டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இதனை தயாரித்துள்ளனர். தற்போது எங்களின் தொலைக்காட்சி வெளியிடும் நியூஸ் கார்டு டெம்ப்ளேட் இப்படி இருக்காது,’’ என்று ஆன்லைன் பிரிவு நிர்வாகி உறுதி செய்தார்.
பிறகு, இதே நியூஸ் கார்டை Fotoforensics.com இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்தோம். அப்போது இது போலியாகச் சித்தரிக்கப்பட்ட ஒன்று என்பது சந்தேகமின்றி தெளிவானது.

முடிவு:
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில், தவறான தகவல் உள்ளதாக உறுதி செய்யப்படுகிறது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மக்கள் ஒற்றுமையாக வசிப்பதில் தமிழக அளவில் ராமநாதபுரம் முதலிடம்: பேஸ்புக் வதந்தி
Fact Check By: Pankaj IyerResult: False
