
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்லைக் கழகத்தில் (ஜே.என்.யூ) படித்த மாணவர்களுக்கு டாடா நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படாது என்று டாடா நிறுவனங்களின் தலைவர் ரத்தன் டாடா அறிவித்ததாக ஒரு பதிவு சில ஆண்டுகளாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link 1 | Archived Link 1 | Facebook Link 2 | Archived Link 2 |
ரத்தன் டாடா படத்துடன் கூடிய புகைப்பட பதிவு ஒன்றை ஆங்கிலத்தில் உருவாக்கியுள்ளனர். அதில், “ரத்தன் டாடா அவர்களிடமிருந்து வந்துள்ள மிகப்பெரிய அறிவிப்பு, “டாடா குழும நிறுவனங்களில் இனி ஜே.என்.யூ மாணவர்கள் பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள். நாட்டுக்கே உண்மை உள்ளவர்களாக இல்லாத இவர்கள் எப்படி தாங்கள் பணியாற்றும் நிறுவனத்துக்கு உண்மையுள்ளவர்களாக இருப்பார்கள்” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.
இந்த பதிவை Kalavathi Kala என்பவர் 2016ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி வெளியிட்டுள்ளார். அதை Astro Raveendra Rao R என்பவர் 2020 பிப்ரவரி 19ம் தேதி மறுபதிவு செய்துள்ளார். ஆயிரக்கணக்கானோர் இதை ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
இந்த பதிவு 2016ம் ஆண்டு முதன் முதலில் பகிரப்பட்டுள்ளது. எனவே, 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடந்த போராட்டங்கள் பற்றி முதலில் ஆய்வு செய்தோம். அப்போது, ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவராக இருந்த கன்னையா குமார் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து போராட்டம் வெடித்ததாக செய்திகள் கிடைத்தன.

tamilsnow.com | Archived Link |
இந்த சூழ்நிலையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களுக்கு டாடா நிறுவனங்களில் வேலை வழங்கப்படாது என்று டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா அறிவித்ததாக வதந்தி பரவியிருப்பது தெரிந்தது. உண்மையில் ரத்தன் டாடா அவ்வாறு கூறினாரா என்று கூகுளில் தேடினோம். அப்போது, இது வெறும் வதந்தி என்று 2016ம் ஆண்டு வெளியான செய்திகள் பல நமக்கு கிடைத்தன.

Economic Times | Archived Link |
அதில், ரத்தன் டாடா இவ்வாறு கூறினாரா என்று ட்விட்டர் பயனாளர் ஒருவர் டாடா குழுமத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி டாடா குழுமம் பதில் அளித்திருந்தது. அதில், “திரு டாடா இதுபோன்று எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை” என்று குறிப்பிட்டிருந்தனர்.
Archived Link |
இதன் மூலம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களுக்கு டாடா குழும நிறுவனங்களில் வேலை வழங்கப்படாது என்று ரத்தன் டாடா கூறியதாக பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஜே.என்.யூ மாணவர்களுக்கு வேலை இல்லை என்று ரத்தன் டாடா அறிவித்தாரா?- 4 ஆண்டுகளாக பரவும் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False

Excellent face book work. Thanks