முதல்வரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தாரா சீமான்? – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழகம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆபாசமாக பேசிய வழக்கில் சீமான் மன்னிப்புக் கடிதம் வழங்கினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனு ஒன்றை அளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “முதல்வரை ஆபாசமா பேசிய வழக்கில்..மன்னிப்பு கடிதம்.. கொடுத்தார் சீமான்.. மண்டியிட்ட மான தமிழ் பிள்ளை” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை Ashok A என்பவர் 2020 பிப்ரவரி 6ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

2020 பிப்ரவரி 6ம் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக தலைமைச் செயலகத்தில் வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அந்த புகைப்படத்தை வெளியிட்டு ஆபாசமாக பேசிய வழக்கில் சீமான் மன்னிப்பு கடிதம் வழங்கினார் என்று குறிப்பிட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு கூட ஒரு வழக்கில் ஆஜராகிவிட்டு பேட்டி எல்லாம் கொடுத்த சீமான் மன்னிப்பு கேட்டார் என்று கூறுவது ஆச்சரியமாக இருந்தது.

tamilmurasu.com.sgArchived Link

ஒருவர் மன்னிப்பு கடிதம் வழங்குகிறார் என்றால் அதை பகிரங்கமாக செய்யச் சொல்வார்கள். இல்லை என்றால் ரகசியமாக செய்யச் சொல்வார்கள். ரகசியமாக செய்கிறார்கள் என்றால் பலருடன் சென்று கடிதம் கொடுத்து, அதை புகைப்படம் எடுக்க வேண்டிய தேவை இல்லை. உண்மையில் இந்த புகைப்படம் எப்போது, எதற்காக எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.

நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படம் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அதில், முதல்வருடனான சந்திப்பு பற்றிய செய்தி மட்டுமே இருந்தது. படம் எதையும் வெளியிடவில்லை. 

தொடர்ந்து தேடியபோது பல ஊடகங்களும் இது தொடர்பாக வெளியிட்ட செய்தி நமக்கு கிடைத்தன. அவை அனைத்திலும் தை பூசத்துக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு ரத்து செய்ததற்கு நன்றி தெரிவிக்கவும் இன்னும் சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் சீமான் சந்தித்ததாக குறிப்பிட்டிருந்தனர். மேலும், இந்து தமிழில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள படத்தை வெளியிட்டிருந்தனர்.

hindutamil.inArchived Link 1
pathivu.comArchived Link 2

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ட்விட்டர் பக்கத்தில் ஏதேனும் பதிவு உள்ளதா என்று தேடினோம். அப்போது, “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் சந்தித்து 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தமைக்கு நன்றி தெரிவித்தும், தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அளிக்க கோரியும் கோரிக்கை மனு அளித்தார்.” என்று எடப்பாடி பழனிசாமி ட்வீட் செய்தது நமக்கு கிடைத்தது.

Archived Link

“5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தமைக்கு நன்றி தெரிவித்தும், தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அளிக்க கோரியும் கோரிக்கை மனு அளித்தார்” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியே தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்திகள், ட்வீட்கள் நமக்கு கிடைத்துள்ளன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்த சீமான் என்று தவறான தகவல் பகிரப்பட்டு வருவது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஈ.பி.எஸ்-சிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்த சீமான் என்று பகிரப்படும் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:முதல்வரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தாரா சீமான்? – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Chendur Pandian 

Result: False