
சில மாதங்களுக்கு முன்பு சாலையில் சிலம்பம் சுழற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பாட்டிக்கு வட இந்தியாவில் மதிப்பு கிடைத்துள்ளது, என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த பாட்டி தமிழகத்தைச் சேர்ந்தவரா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

சிலம்பம் சுழற்றும் பாட்டியின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ்நாட்டு பாட்டி சிறிது நாட்களுக்கு முன் ரோட்டில் காட்ட பட்ட திறமை சேர வேண்டிய இடத்துல சேர்ந்துருச்சி.. ஆனா சேர்ந்த இடம் வட இந்தியா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Krish Karan என்பவர் 2020 ஆகஸ்ட் 24ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ வழியின்றி மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள ஒரு சாலையில் சிலம்பம் சுற்றி யாசகம் கேட்டதாகக் கூறி பரபரப்பாக ஒரு பாட்டி பற்றி செய்திகள் பரவின. அவர் சேலை அணிந்திருந்த விதமே அவர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர் இல்லை என்பதை உணர்த்தியது. அவருக்கு சினிமா திரைப்பட நடிகர் சோனு சூத் கூட உதவ முன்வந்ததாக செய்திகள் வெளியாகின.
அதைத் தொடர்ந்து அந்த பாட்டி பிரபலம் ஆனார். தற்போது தமிழகத்தைச் சேர்ந்த அந்த பாட்டிக்கு வட இந்தியாவில் மரியாதை கிடைத்தது என்ற வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த பாட்டி கம்பு சுத்தியது தமிழ்நாட்டிலா என்று ஆய்வு செய்தோம். முதலில் புனேவில் கம்பு சுத்திய பாட்டியும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாட்டியும் ஒருவர்தானா என்று ஆய்வு செய்தோம். வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். சரியான முடிவு கிடைக்கவில்லை. நீண்ட தேடலுக்குப் பிறகு ஸீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ச ரி க ம ப சாம்பியன் நிகழ்ச்சியில் பாட்டி வீடியோ வெளியானது தெரிந்தது. அதில் “வாரியர் அஜ்ஜிக்கு (பாட்டிக்கு) நம் மரியாதை” என்று குறிப்பிட்டிருந்தனர்.
புனே பாட்டியின் பெயர் என்ன என்று தேடிப் பார்த்தோம். பல்வேறு ஊடகங்களில் அஜ்ஜி பாட்டி என்று வீடியோ வெளியிட்டிருந்தனர். வீடியோ பிரபலம் அடையவே பலரும் அந்த பாட்டிக்கு உதவிக்கரம் நீட்டினர். அந்த பாட்டி தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டிருந்தது. அதில், பாட்டியின் பெயர் சாந்தாபாய் பவார் என்று குறிப்பிட்டிருந்தனர். ‘’எட்டு வயதில் அவருடைய தந்தை இந்த கலையை அவருக்கு கற்றுக் கொடுத்ததாகவும்” குறிப்பிட்டிருந்தனர்.
ஏ.என்.ஐ செய்தி ஊடகம் வெளியிட்ட முழுமையான செய்தி அடிப்படையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது. அதில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்த பாட்டி சினிமாவில் பணியாற்றியவர். பிரபல இந்தி நடிகைகள் ஹேமமாலினி, ஶ்ரீதேவி மற்றும் தர்மேந்திராவுடன் இணைந்து பணியாற்றியதாக, குறிப்பிட்டிருந்தனர்.

இதன் மூலம் மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த பாட்டி பற்றிய செய்தியை, அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று கூறி தவறான தகவல் பரப்பி வருவதாக, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சாலையில் சிலம்பம் சுழற்றிய இந்த பாட்டி தமிழகத்தைச் சேர்ந்தவரா?
Fact Check By: Chendur PandianResult: False
