
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மார்ச் 31ம் தேதி வரை இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்ததாக, ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
நியூஸ் 18 தமிழ் பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மார்ச் 31 முதல் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை இயங்கும். – தமிழக அரசு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை, Boxer Johnpaul என்பவர் மார்ச் 28, 2020 அன்று வெளியிட்டுள்ளார். நிலைத் தகவலில், “தேவையா…நீங்க வேனும்னா பாருங்க இதுவரை அமைதியா நடந்த ஊரடுங்கு…இதற்கு பிறகு அமைதியா நடக்காது….இத்தனை நாள் மதுக்கடை இல்லாததால் தான் பல குடும்பங்கள் ஊரடங்கிலும் நிம்மதியாக இருந்தது…இனிமேல் எத்தனை குடும்பங்கள் தாலி அறுக்கப் போகுதோ தெரியல….” என்று குறிப்பிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழகத்தில் அத்தியாவசிய தேவைக்கு மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், பால் மற்றும் மருந்தங்கள், பெட்ரோல் பங்குகள் திறந்திருக்கும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் பிறகு அதிலும் நேரக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. ஆனால், மதுக்கடைகள் அடைக்கப்படும் என்று தமிழக அரசு உறுதியாக கூறியிருந்தது. திடீரென்று இரண்டு மணி நேரம் திறந்திருக்கும் வகையில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதாக நியூஸ் கார்டு வைரலாகி வருகிறது.
dinakaran.com | Archived Link 1 |
dinamalar.com | Archived Link 2 |
இந்த நியூஸ் கார்டு பார்க்கும்போது அசல் போலத் தெரியவில்லை. ஃபாண்ட் மற்றும் பின்னணி டிசைன் என பலவும் வித்தியாசமாக இருந்தது. எனவே, முதலில் நியூஸ் 18 தமிழ் இந்த நியூஸ் கார்டை வெளியிட்டதா என்று ஆய்வு செய்தோம்.
நியூஸ் 18 தமிழின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான புகைப்படங்களைப் பார்த்த போது இந்த நியூஸ் கார்டு போலியானது என்று அந்த நிறுவனம் வெளியிட்ட பதிவு கிடைத்தது. மேலும், “தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 14ம் தேதி வரை மூடப்படும் – தமிழக அரசு உத்தரவு” என்று வெளியான அசல் நியூஸ் கார்டும் கிடைத்தது.
Facebook Link 1 | Archived Link 1 |
Facebook Link 2 | Archived Link 2 |
டாஸ்மாக் கடைகள் மார்ச் 31ம் தேதி வரை திறந்திருக்கும் என்று பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று நியூஸ் 18 தமிழ் ஊடகம் பதிவு வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தமிழகத்தில் மதுக்கடைகள் இயங்கும் என்று அறிவித்ததா தமிழக அரசு?
Fact Check By: Chendur PandianResult: False
