
‘’செப்டம்பர் 14 முதல் தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும்,’’ எனும் தலைப்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், ‘’செப்டம்பர் 14 முதல் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும். தியேட்டர்கள் அக்டோபர் 1 முதல் திறக்கப்படும்‘’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
இதே தகவலை வாட்ஸ்ஆப் வழியே நம்மை தொடர்புகொண்டு, வாசகர்கள் சிலர் உண்மையா என்று சந்தேகம் எழுப்பியிருந்தனர்.
உண்மை அறிவோம்:
இந்த தகவல் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் என பலவற்றிலும் பரவ தொடங்கியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை உண்மை என நம்பி பலரும் பதட்டமடைய தொடங்கியுள்ளனர்.
ஆனால், இந்த அறிக்கையை சற்று நிதானமாக ஊன்றி கவனித்துப் படித்தால், அது போலியாக உருவாக்கப்பட்டது என தெரியவரும். அதில் உள்ள எழுத்துப் பிழை, வழக்கத்திற்கு மாறான ஃபாண்ட் போன்றவையே இது போலி அறிக்கை என்பதை காட்டிக் கொடுப்பதாக உள்ளன.
உண்மையில், இந்த தகவல் பரவ தொடங்கிய சில மணி நேரத்திலேயே இது வெறும் வதந்தி என்று கூறி தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
இதேபோல, நக்கீரன் வெளியிட்ட செய்தியின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், ‘’தமிழகத்தில் செப்டம்பர் 14ம் தேதி திறக்கப்படும்; அக்டோபர் 1ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்படும்,’’ என்ற தகவல் தவறாகும்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட தகவல் தவறானது என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.

Title:செப்டம்பர் 14 முதல் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று பரவும் வதந்தியை நம்பாதீர்!
Fact Check By: Pankaj IyerResult: False
