
‘’குழந்தையை தாக்கும் பள்ளி ஆசிரியை,’’ என்ற பெயரில் பகிரப்படும் ஒரு வைரல் வீடியோவின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Video Link |
Videos veer vaniyar
என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த வீடியோ பதிவை நவம்பர் 4, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ‘’உங்களிடம் எந்த எண் மற்றும் குழு இருந்தாலும் ஒரு எண்ணை கூட தவறவிடக்கூடாது, இந்த வீடியோவை அனைவருக்கும் அனுப்புங்கள்.அது சூசைநகர் செயின்ட் ஜோசப் பள்ளியின் ஆசிரியர், எனவே இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள், இதனால் இந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் இரண்டும் மூடப்படும்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நினைத்துப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோவில், பிஞ்சு குழந்தையை ஒரு பெண் தாறு மாறாக அடித்து சித்ரவதை செய்கிறார். அத்துடன் மிக தரக்குறைவாகவும் பேசுகிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்பதோடு, கடுமையாக தண்டிக்கக் கூடிய செயலாகும்.
ஆனாலும், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை பல ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளதோடு, லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இது உண்மைச் செய்தி என நினைத்து குழப்பத்தில் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த வீடியோவில் குழந்தையை தாக்குபவர் சூசைநகர் செயின்ட் ஜோசப் பள்ளியின் ஆசிரியரா, இல்லையா என விவரம் தேடினோம். நீண்ட நேரம் தேடியும் சரியான தகவல் கிடைக்கவில்லை.
அந்த வீடியோவில் பேசும் பெண் தமிழில்தான் பேசுகிறார், ஆனால், அதன் உச்சரிப்பு இந்திய தமிழர்கள் பேசுவது போல இல்லை. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பேசுவது போல அவரது உச்சரிப்பு உள்ளது.
இதன்பேரில், ரிவர்ஸ் இமேஜ் தேடல், வித விதமான கீ வேர்ட்கள் பயன்படுத்தி தேடினோம். அப்போது, இச்சம்பவம் மலேசியா நாட்டில் கடந்த 2017ம் ஆண்டில் நிகழ்ந்த ஒன்று என தெரியவந்தது.
TheMalaysianTimes Link | FreeMalaysiaToday Link |
இதன்படி மலேசியாவில் உள்ள புச்சாங் பெர்டனா பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. குறிப்பிட்ட குழந்தைக்கு 6 வயது உள்ளது என்றும், அவளது தாய் இறந்துவிட்ட நிலையில், அவளை பராமரித்து வரும் மூதாட்டி தனவள்ளி (62 வயது) என்பவர் உணவைக் கீழே சிந்தியதால் அடித்து உதைத்ததாக தெரியவருகிறது. அவரை 2017ம் ஆண்டே போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியும் உள்ளனர்.
இதுபற்றி பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.
TheTrueNet News Link | TheNewsMinute Link |
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) மேற்கண்ட சம்பவம் தமிழகத்தில் நடைபெறவில்லை. அந்த வீடியோவில் இருப்பவர் பள்ளி ஆசிரியை இல்லை.
2) இந்த சம்பவம் 2017ம் ஆண்டில் மலேசியாவில் நிகழ்ந்ததாகும். சம்பந்தப்பட்ட பெண்ணை அப்போதே போலீசார் கைது செய்துள்ளனர்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
