
மிசோரம் மாநிலத்தில் சமூக இடைவெளி சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அழகாக இடைவெளி விட்டு காய்கறி உள்ளிட்ட பொருட்களை சாலையில் விற்க ஏற்பாடு செய்யப்பட்ட படங்களை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “மிசோரம் என்ற பகுதியும் நம்ம நாட்லதான் இருக்கு. எவ்வளவு அழகாக சமூக இடைவெளியை பின்பற்றி அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார்கள் இந்த மக்கள். பார்க்கவே ரொம்ப பொறாமையாக இருக்கிறது.! மிசோரம் மார்க்கட்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை PMK YOUTH FORCE என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஏப்ரல் 28ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியாவின் ஒரு பகுதியில் ஊரடங்கு மிகச் சிறப்பான முறையில் கடைபிடிக்கப்படுகிறது என்ற தகவல் மகிழ்ச்சியானதுதான். எனினும், இந்த படம் மிசோரமில் எடுக்கப்பட்டதுதானா என்று ஆய்வு செய்தோம். மிசோரம் மாநிலத்தில் எந்த இடம் என்று குறிப்பிடவில்லை.
இதனால் மொட்டையாக மாநிலத்தின் பெயரை டைப் செய்து தேடினால் பலன் இருக்கப்போவது இல்லை. எனவே, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.
அப்போது இந்த படம் மியான்மரில் எடுக்கப்பட்டது என்று ஏப்ரல் 21ம் தேதி வெளியான தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டு இணையதளங்களில் செய்தி வெளியாகி இருந்தது தெரிந்தது. அனைத்திலும் இந்த புகைப்படங்கள் மியான்மர் நாட்டில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.
நம்முடைய தேடலில் VSK ASSAM என்ற ட்விட்டர் பக்கத்தில் மேலும் சில படங்கள் வெளியிடப்பட்டிருந்தது. அதிலும் கூட மியான்மர் காய்கறி சந்தையில் மிகத் தீவிரமாக சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றனர் என்று குறிப்பிட்டிருந்தனர்.
அந்த படங்களைப் பார்க்கும்போது அதில் உள்ள கட்டிடம் ஒன்றின் பெயர் பலகை நன்கு தெரிந்தது. சென்ட்ரல் மோட்டல் என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் அருகில் புத்தவிகாரம் போன்ற தோற்றமும் தெரிந்தது. இதன் அடிப்படையில் கூகுளில் தேடினோம். அப்போது யங்கூன் நகரில் சென்ட்ரல் மோட்டல் என்று ஒன்று இருப்பது தெரிந்தது.
அதன் முன்புற தோற்றமும் நமக்கு கிடைத்த படத்தில் உள்ள தோற்றமும் ஒரே மாதிரி இருந்தது. மேலும், அந்த இடத்தை கூகுள் மேப்பில் ஸ்ட்ரீட் வீயூ முறையில் பார்த்தபோது அருகில் Aung Chan Tha Pagoda புத்த கோவில் இருப்பதும் தெரிந்தது. எனவே, இந்த புகைப்படம் மியான்மரில்தான் எடுக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மியான்மரில் எடுக்கப்பட்ட படத்தை இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் எடுத்தது என்று பகிர்ந்து வருவது உறுதியாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:சமூக இடைவெளியை பின்பற்றும் மிசோரம் மார்க்கெட்: புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
