
‘’கோமியத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பல்வேறு மருந்துகளுக்கு, அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் காப்புரிமை பெற்றுள்ளன,’’ எனும் தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Muralikrishna S Hari என்பவர் கடந்த ஜூன் 14, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், இந்தியர்கள் பலரும் கோமியத்தின் மகத்துவம் பற்றி தெரியாமல் கிண்டல் செய்யும் நிலையில், கோமியத்தில் இருந்து தயாரிக்கப்படும் புற்றுநோய், ஆன்ட்டி பயாட்டிக், ஆன்ட்டி-இன்ஃபெக்ஷன் மருந்துகளுக்கு, அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் காப்புரிமை பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பசுவின் கோமியத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளதாக, பல தரப்பிலும் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு இந்த குழப்பத்தை மேலும் அதிகரிப்பதாக உள்ளது.
இதன்படி, இவர்கள் குறிப்பிட்டுள்ள காப்புரிமை ஆவணங்கள் உண்மையானவையா, அவற்றின் உண்மை விவரம் என்னவென்று, ஆய்வு மேற்கொண்டோம்.
நீண்ட தேடுதலுக்குப் பின், இதில் குறிப்பிட்டுள்ளது தொடர்பான ஒரு செய்தி ஆதாரம் தினமலரில் கிடைத்தது. அந்த செய்தியில், பசுவின் சிறுநீரில் இருந்து பல்வேறு நோய்களை குணப்படுத்தும் புதிய மருந்தை நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாகவும், அதற்கு அமெரிக்கா காப்புரிமை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். இது ஜூன் 30, 2010 அன்று வெளியிடப்பட்ட செய்தியாகும். இதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
பொதுவாக, இந்த மாதிரி மருத்துவம், விஞ்ஞானம் சார்ந்த செய்திகளில், ஆங்கிலத்தில் கூறுவதை தமிழில் தவறாக மொழிபெயர்ப்பு செய்து ஊடகங்கள் வெளியிடுவது வழக்கம். இதுபோலத்தான், தினமலர் செய்தியை பார்க்கும்போது நமக்கு சந்தேகம் தோன்றியது.
இதையடுத்து, தினமலரில் கூறப்பட்டுள்ளதுபோல, ஆங்கிலத்தில் யாரேனும் செய்தி வெளியிட்டுள்ளனரா என தகவல் தேடினோம். அப்போது, தி இந்து வெளியிட்ட செய்தி ஒன்றின் விவரம் கிடைத்தது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதன்படி, கடந்த 2002ம் ஆண்டு நாக்பூரில் உள்ள மாடு தொடர்பான ஆராய்ச்சி மையம் (Go-Vigyan Anusandhan Kendra) மற்றும் CSIR ஆகியவை இணைந்து மாட்டின் சிறுநீரில் இருந்து சில கண்டுபிடிப்புகளை செய்துள்ளதாகவும், இது பற்றி மேலும் ஆய்வு செய்ய அமெரிக்க காப்புரிமை மற்றும் வர்த்தக அலுவலகம் காப்புரிமை வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்பின், சிஎஸ்ஐஆர், ஐசிஏஆர் உள்ளிட்டவற்றுடன் கோவிக்யான் இணைந்து பலவித ஆராய்ச்சிகளை செய்துள்ளது. அவற்றுக்கு அமெரிக்கா மற்றும் சீனாவிடம் இருந்து இந்த ஆராய்ச்சிக்குழுவினர் காப்புரிமை பெற்றுள்ளனர். இதுபற்றி விரிவாக படிக்க இங்கே படிக்கவும்.
அதாவது, இந்தியாவை சேர்ந்தவர்கள்தான் மாட்டின் சிறுநீர், சாணம் போன்றவற்றில் இருந்து மருந்துகள் தயாரிப்பதற்கான ஆராய்ச்சி மேற்கொள்ள காப்புரிமை பெற்றிருக்கிறார்கள். இவர்கள் ஏதேனும் கண்டுபிடித்த பிறகுதான் அதற்கான காப்புரிமை பெற விண்ணப்பிக்க வேண்டியுள்ளது.
மேலும், அமெரிக்காவில் யாரும் மாட்டின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்பட்ட புற்றுநோய் உள்ளிட்ட மருந்துகளுக்கு காப்புரிமை பெறவில்லை. இவர்கள் குறிப்பிடும் காப்புரிமை ஆவணத்திலேயே இதுபற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களை பார்க்க இங்கே 1 மற்றும் இங்கே 2 கிளிக் செய்யவும்.
இதன்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடப்படும் ஆவணங்களில் ஒன்றின் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
இதேபோல, மற்றொரு காப்புரிமை ஆவணத்தின் விவரமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்த உண்மை விவரம்,
1) பசு மாட்டின் சிறுநீர், சாணம் தொடர்பான பல பொருட்களின் மருத்துவ குணம் பற்றி இந்தியாவில் உள்ள GoVigyan, சிஎஸ்ஐஆர் உள்ளிட்டவை ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. தங்களது ஆய்வுப் பணிகளுக்காக, அவை முன்கூட்டியே அமெரிக்காவிடம் காப்புரிமை பெற்று வைத்துள்ளன.
2) பசு மாட்டின் சிறுநீரில் இருந்து இதுவரை கேன்சர், ஆன்டி பயாட்டிக் மருந்துகள் எதுவும் தயாரிக்கப்படவில்லை.
3) அமெரிக்க பல்கலைக்கழகங்கள், அமெரிக்க நிறுவனங்கள் யாரும் இதற்கு காப்புரிமை பெறவும் இல்லை.
எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல் தவறான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுசெய்த ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ எதையும் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கோமியத்தில் இருந்து தயாரித்த மருந்துகளுக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றது உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
