
ஜெயலலிதாவை விட இந்திரா காந்திதான் முக்கியம் என்று பிரபல நடிகர் அஜித்தின் மனைவி வித்யா பாலன் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் தமிழ் இணைய தளமான ‘சமயம்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஏன் இவ்வாறு செய்தி வெளியிட்டனர் என்று ஆய்வு செய்ய தீர்மானித்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு…
தகவலின் விவரம்:
ஜெயலலிதாவை விட இந்திரா காந்தி தான் முக்கியம்: தல அஜித்தின் மனைவி வித்யா பாலன்!

டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் தமிழ் பிரிவான tamil.samayam.com-ல் ஏப்ரல் 8ம் தேதி தல அஜித்தின் மனைவி வித்யா பாலன் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளனர். ஜெயலலிதாவை விட இந்திராகாந்தி தான் முக்கியம் என்று நடிகை வித்யாபாலன் கூறியதாகவும் வித்யா பாலனை அஜித்தின் மனைவி என்று தலைப்பிட்டுள்ளனர். டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் தமிழ் பிரிவே இப்படி ஒரு செய்தி வெளியிட்டுள்ளது எனில், அது உண்மைதான் என நினைத்து பலரும் ரியாக்ட் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்
தமிழின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் அமர்க்களம் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது அந்த படத்தின் கதாநாயகியாக நடித்த ஷாலினியை காதலித்தார். இவர்கள் திருமணம் கடந்த 2000ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
உண்மை இப்படி இருக்க, சமயம்.காம் இணையத்தில் “அஜித் மனைவி வித்யா பாலன்” என்று தலைப்பிட்டுள்ளனர். அந்த செய்தியை முழுவதுமாக படித்தோம்.
செய்தியின் சுருக்கம் பின்வருமாறு:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை பிரபல இயக்குநர் விஜய் படமாக இயக்குகிறார். இதில், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை வித்யாபாலனை நடிக்க வைக்க முயன்றிருக்கிறார். ஆனால், அவர் ஏற்கனவே, இந்திரா காந்தி வாழ்க்கை வரலாறு வெப் சீரிசில் நடித்த ஒப்புக்கொண்டாராம். இதனால், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க முடியவில்லை என்று கூறினாராம். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா நடிக்கிறார்.
இந்த செய்தியில் ஒரே ஒரு இடத்தில், அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்துள்ளார் வித்யா பாலன் என்று சொல்லப்பட்டுள்ளது. மற்றபடி அஜித் மனைவி என்று எல்லாம் எங்கேயும் சொல்லப்படவில்லை. அந்த படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்தவர் வித்யாபாலன் என்றும் சொல்லப்படவில்லை.
அதேநேரத்தில், ஜெயலலிதாவை விட இந்திரா காந்தி முக்கியம் என்றும் அவர் எங்கேயும் குறிப்பிடவில்லை. ஏற்கனவே வெப் சீரிஸில் நடிக்க ஒப்புக்கொண்டதால் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க முடியவில்லை என்றே கூறியுள்ளார். வேண்டுமென்றே, செய்தியின் தலைப்பில் திரித்து கூறப்பட்டுள்ளது தெரிந்தது.
செய்தியை வைரல் ஆக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தவறான தலைப்பும் வைக்கப்பட்டுள்ளது உறுதியானது.
நேர்கொண்ட பார்வையில் அஜித் – வித்யாபாலன் கணவன் மனைவியாக நடிக்கின்றார்களா என்று தேடினோம். கூகுளில் அஜித் – வித்யா பாலன் திருமணம் என்று டைப் செய்ததும் பல செய்திகள் குவிந்தன.

சில தினங்களுக்கு முன்பு அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் ஸ்டில் வெளியாகி இருக்கிறது. அதில், அறை ஒன்றில் அஜித் – வித்யாபாலன் திருமண புகைப்படம் இருப்பது போன்று படம் வெளியாகி இருந்தது. இந்த படங்களை அஜித் ரசிகர்கள் வைரல் ஆக்கியிருந்தனர். இதைத் தொடர்ந்தே இப்படி தலைப்பு வைத்திருக்கலாம் என்று தெரிகிறது. இதுதொடர்பான தினமலர் செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், அஜித் மனைவி வித்யாபாலன் என்று தலைப்பில் தவறு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை நாம் உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ என எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:அஜித் மனைவி ஷாலினியா? வித்யாபாலனா? குழப்பத்தில் சமயம் தமிழ்!
Fact Check By: Praveen KumarResult: False Headline
