
புதிதாக தீவிரவாதிகள் கூல் டிரிங்ஸில் விஷம் கலந்துவிட்டதாகவும், இதை குடித்த மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்ததாகவும் ஒரு வீடியோ வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ் அப் சாட் பாட் எண்ணுக்கு (+91 9049053770) வீடியோ ஒன்றை அனுப்பியிருந்தார். வாட்ஸ் அப்பில் பரவி வரும் அந்த வீடியோ பற்றிய உண்மை விவரம் அறிய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அந்த வீடியோவில் கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் அழுகிறார். அவர் அருகில் புர்கா அணிந்த பெண் ஒருவர் மயங்கிக் கிடக்கிறார். வீடியோவில், “புதிதாக தீவிரவாதிகள் கூல் டிரிங்ஸில் வந்து, மாசா, கோக்க கோலா மாதிரி நிறைய இருக்கிற கூல்டிரிங்ஸில வந்து அச்டிசில்னு புதுசா ஒரு பாய்சன் கலந்திருக்காங்க. அதை குடிச்சிட்டு எல்லோரும் இறந்திட்டிருக்காங்க. எமெர்ஜென்சியா எல்லோருக்கும் ஃபார்வர்டு பண்ணுங்க” என்று குறிப்பிடுகிறார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஃபேஸ்புக்கில் இந்த வீடியோவை யாராவது பகிர்ந்துள்ளார்களா என்று பார்த்தோம். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீடியோ வைரலாகி இருப்பது தெரிந்தது. அதில், “இந்த வீடியோவை பாருங்கள் யாரும் பெப்சி கொக்கோகோலா மாஷா இந்த மாதிரி சூசை குடிக்காதீர்கள் இதில் பாய்சன் கலந்து இருக்கிறது இதை எல்லோருக்கும் பகிரவும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 2019ம் ஆண்டு மே மாதம் இந்த வீடியோவை Sentur Sooriyaminikkan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் பகிர்ந்திருந்தார்.
உண்மை அறிவோம்:
கூல் டரிங்ஸில் எச்.ஐ.வி கிருமி கலந்துவிட்டது என்று அவ்வப்போது வதந்திகள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டே இருக்கின்றன. தற்போது தீவிரவாதிகள் குளிர் பானங்களில் விஷத்தைக் கலந்துவிட்டார்கள் என்று பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால்,அந்த குளிர்பானங்களைக் குடித்த நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருப்பார்கள். நாடு முழுக்க மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அப்படி எந்த ஒரு செய்தியும் இல்லை.
இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று அறிய ஆய்வு செய்தோம். வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோவை 2018ம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல ஊடகங்கள் யூடியூபில் பதிவேற்றம் செய்திருப்பது தெரிந்தது.
அதில், தெலங்கானா மாநிலத்தில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பது தெரிந்துவிட்டதால் மனைவி, குழந்தை, மாமியாரை அடித்த சப்-இன்ஸ்பெக்டர் என்று குறிப்பிட்டிருந்தனர். இது தொடர்பாக தேடிய போது 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்னணி ஊடகங்களில் இந்த வீடியோ, புகைப்படம், செய்தி வெளியாகியிருப்பது தெரிந்தது.
உண்மைப் பதிவைக் காண: thenewsminute.com I Archive
தெலங்கானாவில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னுடைய மாமியார், மனைவியை மிகக் கொடூரமாகத் தாக்கிய வீடியோவை எடுத்துவந்து, தீவிரவாதிகள் குளிர்பானங்களில் விஷத்தை கலந்துவிட்டார்கள் என்று பீதியைக் கிளப்பியிருப்பது தெளிவானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கூல்டிரிங்ஸ் குடித்தவர்கள் உயிரிழந்தார்கள் என்று பரவும் வீடியோ 2018ம் ஆண்டு தெலங்கானாவில் எடுக்கப்பட்டது என்பதும் அதற்கும் பயங்கரவாத தாக்குதலுக்கும் தொடர்பில்லை என்பதையும் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கூல்டிரிங்ஸில் விஷம் கலந்த பயங்கரவாதிகள்?- வாட்ஸ் ஆப் வீடியோ பற்றிய உண்மை!
Fact Check By: Chendur PandianResult: False
