ரூ.50 லட்சத்தை அண்ணாமலையிடம் ஒப்படைத்தேன் என கார்த்திக் கோபிநாத் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

கோவிலைப் புதுப்பிப்பதாகக் கூறி வசூலித்த ரூ.50 லட்சத்தை அண்ணாமலையிடம் வழங்கினேன் என்று கார்த்திக் கோபிநாத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கோவிலைப் புனரமைக்கப்போவதாகக் கூறி பணம் வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத், பா.ஜ.க தலைவர்களுடன் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கார்த்திக் கோபிநாத் போலீசில் பரபரப்பு தகவல். கோவில் கட்டுவதாக சொல்லி வசூல் செய்தது உண்மை தான்; 50 லட்சம் வசூல் செய்ததாகவும் வசூல் செய்த பணத்தை தன்னிடம் ஒப்படைத்தால் ஒரு கோடியில் கோவில் புதுப்பித்துத் தருவதாக கூறி அண்ணாமலை பணம் பெற்றுக் கொண்டதாக பரபரப்பு தகவலை போலீஸிடம் கார்த்திக் கோபிநாத் தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை திராவிடன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 மே 30ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உப கோவிலை புனரமைக்கப்போவதாகக் கூறி யூடியூபர் கார்த்திக் கோபிநாத் என்ற நபர் பணம் வசூலித்தார் என்று கூறப்படுகிறது. வசூலித்த பணத்தை அவர் கோவில் பணிக்கு செலவிடாமல் ஏமாற்றியதான சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு போலீஸ் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், கார்த்திக் கோபிநாத் கூறினார் என்று வதந்திகள் நியூஸ் கார்டு வடிவத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.

பணம் வசூலில் அண்ணாமலைக்குத் தொடர்பு உள்ளது என்று கார்த்திக் கோபிநாத் உளறல் என்று முன்பு ஒரு நியூஸ் கார்டு வைரல் ஆனது. அது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்திருந்தோம். தற்போது, ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டதாக ஒரு நியூஸ் கார்டு பகிரப்படுகிறது. இதன் டிசைன், தமிழ் ஃபாண்ட் வழக்கமாக புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டில் இருப்பது போல இல்லை. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

புதிய தலைமுறை மே 30, 2022 அன்று வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் அதில் இல்லை. எனவே, புதிய தலைமுறை வெளியிட்டது போன்று போலியான நியூஸ் கார்டை உருவாக்கி வெளியிட்டிருப்பது தெரிந்தது.

இதை உறுதி செய்துகொள்ள, புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகிக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி, இது உண்மையானதா அல்லது போலியானதா என உறுதி செய்யும்படி கேட்டுக்கொண்டோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்தார். 

யூடியூபர் கார்த்திக் கோபிநாத் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று ஆய்வு செய்தோம். ஆவடி பகுதியில் பணியாற்றும் செய்தியாளர்களிடம் கேட்ட போது அப்படி எந்த ஒரு செய்தியும் இல்லை என்றனர். கார்த்திக் கோபிநாத் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் என்று எந்த ஒரு செய்தியும் வெளியாகவும் இல்லை. இதன் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கோவிலை புனரமைக்க ரூ.50 லட்சம் வசூலித்த பணத்தை அண்ணாமலையிடம் வழங்கினேன் என கைது செய்யப்பட்ட யூடியூபர் கார்த்திக் கோபிநாத் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ரூ.50 லட்சத்தை அண்ணாமலையிடம் ஒப்படைத்தேன் என கார்த்திக் கோபிநாத் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False