FACT CHECK: பெட்ரோல் விலை உயர்வுக்கு மட்டும் போராடுவது ஏன் என்று அண்ணாமலை கேட்டாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு போராடாதவர்கள், ஆடம்பர பொருளான பெட்ரோல் விலை உயர்வுக்கு மட்டும் போராடுவது ஏன் என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேட்டதாக பரவும் வதந்தி.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தமிழ்நாடு பா.ஜ.க வெளியிட்டது போன்ற போட்டோ கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அரிசி பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விலையேறிய போது போராடாதவர்கள் ஆடம்பர பொருளான பெட்ரோல் விலையேறினால் மட்டும் போராட வருவது ஏன்? – மாநில தலைவர் திரு.கே.அண்ணாமலை” என்று இருந்தது.

இந்த பதிவை வேற மாறி மீம்ஸ் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 அக்டோபர் 28ம் தேதி பதிவிட்டிருந்தது. இதைப் போல பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் பெட்ரோலை ஆடம்பர பொருள் என்று கூறியது போன்று சமூக ஊடகங்களில் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. உண்மையில் அண்ணாமலை அப்படிக் கூறினாரா என்று ஆய்வு செய்தோம்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு தமிழ்நாடு பா.ஜ.க வெளியிட்டது போன்று உள்ளது. எனவே, அதன் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தை பார்வையிட்டோம். அப்போது அக்டோபர் 24ம் தேதி நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற புகைப்பட பதிவை தமிழ்நாடு பா.ஜ.க வெளியிட்டிருப்பது தெரியவந்தது.

அதில், “அமைச்சர் சேகர் பாபு பாஜகவை எப்படிக் கையாள வேண்டும் என சொன்னதாக அறிகிறேன். பாஜகவை திமுக தொட்டுப் பார்க்கட்டும், பாஜக மீது கைவைத்தால் வட்டியும் முதலுமாக திருப்பி தருவோம். – மாநில தலைவர் திரு.கே.அண்ணாமலை” என்று இருந்தது. இந்த புகைப்பட பதிவை எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெரிந்தது. மற்றபடி பெட்ரோல் ஆடம்பர பொருள் என்று அண்ணாமலை கூறியதாக எந்த பதிவும் இல்லை.

Archive

வேறு எங்காவது அண்ணாமலை அப்படிக் கூறினாரா, அது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. எனவே, தமிழ்நாடு பா.ஜ.க ஊடகத் தொடர்பு நிர்வாகி ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் அண்ணாமலை இவ்வாறு கூறவில்லை, இது போலியானது என்று உறுதி செய்தார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “ஆடம்பர பொருளான பெட்ரோல் விலையேறினால் மட்டும் போராட வருவது ஏன்?” என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியதாகப் பகிரப்படும் புகைப்பட பதிவு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மேற்கண்ட தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பெட்ரோல் விலை உயர்வுக்கு மட்டும் போராடுவது ஏன் என்று அண்ணாமலை கேட்டாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False