
பீகாரில் பாஜக, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்து என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அரசு அலுவலகத்தை ஏராளமான மக்கள் முற்றுகையிட்டு தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “பீகாரில் வெடித்தது மக்கள் புரட்சி நன்றி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக…. நிதிஷ் குமார் தப்பி ஓட்டம்… போதாது போதாது இது நாடு முழுவதும் பரவ வேண்டும். போராட்டக்காரர்களுக்கு வாழ்த்துக்கள்…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை மக்கள் எதிர்ப்பது போன்று தொடர்ந்து சமூக ஊடகங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மக்கள் புரட்சி வெடித்ததாகவும், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தப்பி ஓடினார் என்றும் சிலர் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு நேபாளத்தில் ஜென் Z புரட்சி ஏற்பட்டது. அப்போது வெளியான வீடியோவை பீகாரில் நடந்தது போன்று வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சியில் இடம் பெற்ற சில பகுதிகளை வைத்து முன்பு இதே போன்று வதந்தி பரப்பப்பட்டது. இது நேபாள வீடியோ என்று கடந்த செப்டம்பரிலேயே கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

மேலும், கட்டிடத்தின் மீது பறக்கும் கொடியை பார்க்கும் போதே அது நேபாள நாட்டின் கொடி என்பதை அறிய முடிகிறது. கட்டிடத்தின் மொழி பெயர்ப்பும் கூட அது மாவட்ட நிர்வாக அலுவலகம், சிட்வான் (District Administration Office, Chitwan) என்று தெரியவருகிறது. சிட்வான் என்பது நேபாள நாட்டில் உள்ள நகரமாகும். கட்டிடத்தில் எழுதப்பட்டிருப்பதும் நேபாள மொழி என்று கூகுள் டிரான்ஸ்லேட்டர் கூறுகிறது.
ஏற்கனவே நம்முடைய கட்டுரையில் அந்த கட்டிடம் நேபாளத்தில் உள்ளது என்பதை கூகுள் மேப் உதவியுடன் உறுதி செய்திருந்தோம். மேலும் நேபாள புரட்சியின் போது சிட்வான் மாவட்ட நிர்வாக அலுவலகம் தாக்கப்படுவது தொடர்பாக அப்போது வெளியான சமூக ஊடக பதிவுகளையும் ஆதாரங்களாக அளித்திருந்தோம். இந்த பழைய வீடியோவை எடுத்து, பீகாரில் மக்கள் புரட்சி வெடித்தது என்று தவறாக, விஷமத்தனமாக பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருப்பது தெளிவாகிறது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நேபாள புரட்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பீகார் மக்கள் புரட்சி என்று தவறாக பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பீகாரில் புரட்சி வெடித்ததா?
Fact Check By: Chendur PandianResult: False


