கேரளாவில் இந்துக்கள் தங்கள் வீட்டைவிட்டு வெளியேறும்படி முஸ்லிம்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சாலையில் செல்லும் சிலர் வீடுகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "கேரளாவில் உள்ள இந்து பங்களாக்கள் மீது முஸ்லிம்கள் கற்களை வீசி அவர்களை காலி செய்யுமாறு மிரட்டுகின்றனர் காஷ்மீர் போல்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Vishaka Raj என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2023 ஜூலை 23ம் தேதி பதிவிட்டிருந்தார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

காஷ்மீரில் இந்துக்கள் வெளியேற்றப்பட்டது போல், கேரளாவிலும் இந்துக்களை வெளியேற்றத் தாக்குதல் நடக்கிறது என்று குறிப்பிட்டு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் கேரளாவில் அப்படி ஏதேனும் நிகழ்கிறதா என்று அறிய கூகுளில் சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். சமீபத்தில் கேரளாவில் அப்படி எந்த ஒரு தாக்குதல் சம்பவமும் நடைபெற்றதாக எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

எனவே, இந்த வீடியோவை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவை 2016ம் ஆண்டில் மலையாள மனோரமா தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருப்பது தெரிந்தது. நாதாபுரம் (Nadapuram) பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் மீது தாக்குதல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மலையாளத்தில் வெளியான அந்த செய்தியை பார்த்தோம். அதில், "நாதாபுரத்தில் அமைதியை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. காங்கிரஸ், சிபிஐ(எம்), பாஜக ஆதரவாளர்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 2 டஜன் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க முகத்தை மூடியிருந்தனர். கார், பைக், ஆட்டோக்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: indiatimes.com I Archive

இந்த வீடியோவில் கிடைத்த தகவல் அடிப்படையில் கூகுளில் குறிப்பிட்ட நாளில் வெளியான செய்திகளைப் பார்த்தோம். அப்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சார்ந்த அஸ்லம் என்பவர் அரசியல் படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்தது என்று குறிப்பிட்டு சில செய்திகள் நமக்கு கிடைத்தன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யக் கொண்டு செல்லப்படும் போது இந்த தாக்குதல் நடந்ததாகவும் செய்திகள் நமக்கு கிடைத்தன.

நம்முடைய ஆய்வில் இந்த வீடியோ இப்போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு நடந்த கலவர வீடியோவை எடுத்து, இரு மதத்தினருக்கு இடையேயான மோதல் போல தவறாக சித்தரித்து சமூக ஊடகத்தில் வதந்தி பரப்பியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதியாகிறது.

முடிவு:

கேரளாவில் கொலை வழக்கு தொடர்பாக நடந்த கலவரத்தின் வீடியோவை எடுத்து இந்துக்களை அந்த மாநிலத்தில் இருந்தே விரட்ட முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகர்ந்திருப்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கேரளாவில் இருந்து இந்துக்களை வெளியேற்ற முஸ்லிம்கள் கல்வீசி தாக்கினார்களா?

Written By: Chendur Pandian

Result: False