அ.தி.மு.க பேரணியில் பங்கேற்ற வட இந்தியத் தொழிலாளர்கள் என்று பரவும் படம் உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

விஷச் சாராய சாவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கா அதிமுக சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் வட மாநிலத் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டார்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

வட இந்தியர்கள் போல தோற்றம் கொண்ட சிலர் அ.தி.மு.க கொடியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “1-1/2கோடிதொண்டர்கள் யாரும் வரலயா😩 எடப்பாடி இன்று நடத்திய பேரணியில் வடமாநில கூலி தொழிலாளிகளை தலைக்கு 300 என்று பேசி கூட்டிகிட்டு வந்து . கடைசியில் டீ கூட வாங்கி கொடுக்காமல் அதிக நேரம் நடத்தியே கூட்டி சென்றதால் ., அவர்கள் கோபம் அடைந்து பேசிய கூலியை கொடுத்தால் தான் மேற்க்கொண்டு நடப்போம் என்று ரோட்டு ஓரத்தில் அமர்ந்தனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகைப்படத்தை Praveen Chitti என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 மே 23ம் தேதி பதிவிட்டுள்ளார். இதைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

Archive

உண்மை அறிவோம்:

தி.மு.க அரசுக்கு எதிராக ஆளுநர் மாளிகை நோக்கி அ.தி.மு.க சார்பில் பேரணி மே 22, 2023ல் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொள்ள வட இந்தியத் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டதாகப் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை சில மாதங்களுக்கு முன்பு பார்த்த நினைவு இருந்ததால் இந்த படம் மற்றும் தகவல் சரிதானா என்று ஆய்வு செய்தோம்.

புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2022ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்ற போது அவரை வரவேற்க அழைத்து வரப்பட்ட வட இந்தியத் தொழிலாளர்கள் என்று இந்த படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதைக் காண முடிந்தது.

Archive

2022ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி டெல்லி சென்ற எடப்பாடியாருக்கு வரவேற்பு என்று வீடியோ ஒன்றை அதிமுக-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் பகிர்ந்திருந்தது. அந்த வீடியோ பதிவின் கமெண்ட் பகுதியில் சிலர் இந்த புகைப்படத்தை அப்போதே பதிவிட்டிருந்தனர். 

சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கிய பேரணி என்பது 2023 மே மாதம் நடந்தது. ஆனால், இந்த புகைப்படமோ, 2022 ஜூலையில் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், இவர்கள் சென்னையில் நடந்த அ.தி.மு.க பேரணியில் பங்கேற்றவர்கள் இல்லை என்பது உறுதியாகிறது. பழைய படத்தை எடுத்து, கதை – திரைக்கதை எழுதி சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சென்னையில் நடந்த அதிமுக பேரணியில் பங்கேற்க வட இந்திய தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டதாக பரவும் படம் 2022ம் ஆண்டு டெல்லியில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வந்த போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அ.தி.மு.க பேரணியில் பங்கேற்ற வட இந்தியத் தொழிலாளர்கள் என்று பரவும் படம் உண்மையா?

Written By: Chendur Pandian 

Result: False