
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பனையூருக்கு அழைத்த விஜய் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நடிகர் விஜய் புகைப்படத்துடன் நியூஸ்18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்த விஜய்! கரூரில் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி மற்றும் நிவாரணம் வழங்க அவர்களை தவெக தலைவர் விஜய் பனையூருக்கு அழைத்துள்ளதாக தகவல். வார இறுதிக்குள் அவர்களை பனையூருக்கு அழைத்துவர நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “#தவெக_உன்மையான #தொண்டர்களின்_கவனத்திற்கு ..! #கரூரில் பாதிக்கப்பட்ட மக்களே உயிரிழந்த 41 மனித பிரேதங்களை தூக்கிக்கொண்டு உடனே பனையூருக்கு செல்லுங்கள் உங்கள் விஜய் அழைக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கரூரில் நடந்த தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களை இதுவரை நடிகரும் தவெக தலைவருமான விஜய் சந்திக்கவில்லை. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை பனையூரில் உள்ள தன்னுடைய அலுவலகத்திற்கு விஜய் அழைத்தது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
விஜய் அறிவிப்பு வெளியிட்டதாகக் குறிப்பிடப்படவில்லை, அப்படி ஒரு தகவல் இருப்பது போன்று வதந்தியைப் பரப்பியுள்ளனர். நியூஸ் கார்டு பார்க்க நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது போல் இருந்தாலும், ஃபாண்ட் – டிசைன் சற்று வித்தியாசமாக இருந்தது. எனவே, இந்த நியூஸ் கார்டு உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
இந்த நியூஸ் கார்டை நியூஸ் 18 டிஜிட்டல் பொறுப்பாளருக்கு அனுப்பினோம். அவரும் இது போலியானது என்பதை உறுதி செய்தார். மேலும், இது தொடர்பாக நியூஸ் 18 ஃபேஸ்புக் பக்கத்தில் மறுப்பு வெளியிட்டிருப்பதாக அதன் இணைப்பையும் அளித்தார். அதில், “#JUSTIN கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களை விஜய் பனையூருக்கு அழைத்ததாக நியூஸ் 18 பெயரில் Fake Card” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தன.
முடிவு:
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை பனையூருக்கு அழைத்த விஜய் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்த விஜய் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
