
சிலை திருட்டில் ஈடுபட்டு வந்த பாஜக-வைச் சேர்ந்த நான்கு பேரை தஞ்சை மாவட்ட போலீஸ் கைது செய்தது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. எனவே, அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
கோவில் சிலைகளுடன் நான்கு பேர் நிற்கும் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டுடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நியூஸ் கார்டில், “சிலைத் திருட்டில் ஈடுபட்டு வந்த பாஜகவை சேர்ந்த நான்கு பேர் கைது தஞ்சை காவல்துறை அதிரடி” என்று இருந்தது. அதற்கு கீழ், “கோயில் சிலையை எல்லாம் திருட வேண்டியது, பின்பு காணவில்லை என்று போராட்டம் பண்ண வேண்டியது! கேட்டால் பாஜக தொண்டன் என்று பீத்தி கொள்வது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த பதிவை ஸ்நேக் பாபு என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 செப்டம்பர் 30ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
தஞ்சை மாவட்டத்தில் கோவில் சிலை கடத்திய நான்கு பேர் கைது என்று குறிப்பிட்டு நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர். படத்தில் உள்ளவர்கள் சிரித்தபடி போஸ் கொடுக்கின்றனர். அவர்கள் திருடர்களா, போலீசா என்ற சந்தேகம் எழுந்தது.
மேலும் இந்த டிசைன் பிரேக்கிங் நியூஸ் கார்டை தற்போது நியூஸ் 7 தமிழ் பயன்படுத்துவது இல்லை. இது 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது பயன்படுத்தப்பட்டது என்று பல முறை நியூஸ் 7 தரப்பில் நம்மிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே, 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது வெளியான நியூஸ் கார்டுடன் இந்த படத்தை ஒப்பிட்டுப் பார்த்தோம். அதில் நியூஸ் கார்டின் வலது பக்கத்தில் தேதியை குறிப்பிட்டிருந்தனர். ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் தேதி அழிக்கப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: Twitter I Archive
தமிழ் ஃபாண்ட் இரண்டுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசத்தைக் காண முடிந்தது. மேலும், அசல் நியூஸ் கார்டில் வாட்டர் மார்க் லோகோ தெளிவாகக் காண முடிந்தது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் அது இல்லை. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு உண்மையானது இல்லை என்பதை உறுதிப்படுத்தியது.
அடுத்து நியூஸ் கார்டில் உள்ள புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது எந்த தகவலும் கிடைக்கவில்லை. தஞ்சை, சிலை கடத்தல், பா.ஜ.க என பல கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது, 2020ம் ஆண்டு விகடன் இணையதளத்தில் வெளியான செய்தியில் இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: vikatan.com I Archive
அதில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் சிலை கடத்தப்படுவது பற்றி தகவல் அறிந்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், சிலை கடத்தல் கும்பலை 12 மணி நேரத்தில் சுற்றி வளைத்த போலீஸ் டீம் என்று இந்த படத்தைப் பகிர்ந்திருந்தனர். அதாவது சிலை கடத்தியவர்களைக் கைது செய்த போலீசார் படத்தை, சிலை கடத்தில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகிகள் என்று தவறாக பகிர்ந்திருப்பது தெரியவந்தது.
வேறு எந்த செய்தியிலாவது கைது செய்யப்பட்டவர்கள் பா.ஜ.க நிர்வாகிகள் என்று வேறு ஏதேனும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளதா என பார்த்தோம். அப்படி எந்த செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. விகடனில் வெளியான செய்தி தொடர்பாக, அந்த நிருபரை தொடர்புகொண்டு கேட்டோம். நான்கு பேர் இல்லை, மூன்று பேர்தான் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அரசியல் பின்னணி பற்றி போலீஸ் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் அளிக்கப்படவில்லை. அவர்கள் குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவது தவறானது என்றார்.
அடுத்ததாக, தஞ்சை மாவட்டத்தில் சிலை கடத்தலில் ஈடுபட்டதாக நான்கு பா.ஜ.க-வினர் கைது செய்யப்பட்டார்களா என்று தேடினோம். அப்போது, நாகை மாவட்டத்தில் வேதாரண்யத்தில் சிலை கடத்தலில் ஈடுபட்ட பா.ஜ.க வேதாரண்யம் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வம் மற்றும் அவரது நண்பர் பைரவ சுந்தரம் என இரண்டு பேர் கைது செய்யப்பட்ட செய்தி கிடைத்தது. அவரிடமிருந்து பல கோடி மதிப்புடைய 8 உலோக சிலைகளை போலீசார் பறிமுதல் செய்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அசல் பதிவைக் காண: hindutamil.in I Archive
நம்முடைய ஆய்வில்,
நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிலை கடத்திய பா.ஜ.க-வினர் நான்கு பேர் என்ற படத்தில் உள்ளவர்கள் குற்றவாளிகள் இல்லை, சிலை கடத்தலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த போலீசார் என்பதும் உறுதியாகி உள்ளது.
இதன் மூலம் தஞ்சாவூரில் கோவில் சாமி சிலைகளை கடத்தியதாக நான்கு பேரை போலீஸ் கைது செய்தது என்று பகிரப்படும் தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கோவில் சிலைகளை கடத்திய பா.ஜ.க-வினர் நான்கு பேர் கைது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:சிலை திருட்டில் ஈடுபட்ட பா.ஜ.க-வைச் சேர்ந்த 4 பேர் கைது என்று பரவும் தவறான தகவல்!
Fact Check By: Chendur PandianResult: False
