உண்ணாவிரத பந்தலுக்குப் பின்னால் உணவு விநியோகித்த பாஜக என்று பரவும் போலியான நியூஸ் கார்டு!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

பாரதிய ஜனதா கட்சி சென்னையில் நடத்திய உண்ணாவிரதப் போராட்ட பந்தலுக்குப் பின்னால் உணவு விருந்து நிகழ்ச்சி நடத்தியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பந்தலுக்கு பின்னால் உணவு விருந்து. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த உண்ணாவிரத போராட்ட பந்தலுக்கு பின்னால் உணவு விருந்து. புகைப்படங்கள் இணையத்தில் பரவியதால் பிரியாணி அண்டா பத்திரம் என ட்விட்டரில் டிரண்ட் ஆனது” என்று இருந்தது.

இந்த பதிவை Ranipet Vedha என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜனவரி 25ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மதம் மாற வற்புறுத்தியதால் அரியலூரைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்று பா.ஜ.க தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. மாணவியின் பெற்றோருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பா.ஜ.க உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் சார்பில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு மதிய உணவு விருந்து வழங்கப்பட்டது என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டது போன்று பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், அதில் உள்ள படம் சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகும். படத்தில் உணவு சாப்பிடுபவர்களில் ஒருவர் பாஜக செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான சூர்யா ஆவார். சில ஆண்டுகளுக்கு முன்பு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிவிட்டு, அவர்களுடன் சேர்ந்து சூர்யா உணவு சாப்பிட்ட படம் இது. இதை வைத்து அப்போதே சில வதந்திகள் பரப்பப்பட்டது நினைவிலிருந்ததால் இந்த நியூஸ் கார்டு தொடர்பாக ஆய்வு செய்தோம்.

நியூஸ் கார்டின் டிசைன், தமிழ் ஃபாண்ட் வழக்கமாக தந்தி டிவி வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. இது போலியானது என்பதை நமக்கு இவை உணர்த்தின. இருப்பினும் ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய, முதலில் தந்தி டிவி இப்படி ஒரு நியூஸ் கார்டு வெளியிட்டதா என்று பார்த்தோம்.

ஆனால், தந்தி டிவி-யின் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் இப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் வெளியாகவில்லை. எனவே, தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளரைத் தொடர்புகொண்டு விசாரித்தோம். அவர்களும் இது போலியானது என்று உறுதி செய்தனர்.

Archive

அடுத்ததாக இந்த நியூஸ் கார்டில் உள்ள புகைப்படம் தொடர்பாக தேடினோம். எஸ்.ஜி.சூர்யா வெளியிட்ட பதிவை கண்டறிய முடியவில்லை. ஆனால், 2020ம் ஆண்டு மழை வெள்ள காலத்தில் பா.ஜ.க சார்பில் உணவு வழங்கப்பட்டது தொடர்பாக சிலர் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. 2020ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி இந்த புகைப்படத்தை ஒருவர் பகிர்ந்திருந்தார். இதன் மூலம் எஸ்.ஜி.சூர்யா உணவு உட்கொள்ளும் புகைப்படம் 2022 ஜனவரி 25ம் தேதி நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது.

இதன் அடிப்படையில் உண்ணாவிரத போராட்டத்தின் போது உணவு உட்கொண்ட பாஜக -வினர் என்று பகிரப்படும் நியூஸ் கார்டு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பாஜக நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் மதிய உணவு வழங்கப்பட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:உண்ணாவிரத பந்தலுக்குப் பின்னால் உணவு விநியோகித்த பாஜக என்று பரவும் போலியான நியூஸ் கார்டு!

Fact Check By: Chendur Pandian 

Result: False