டெல்லியில் வெற்றி பெற்றதும் பாஜக மெட்ரோ கட்டணத்தை உயர்த்தியதா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உடன் டெல்லி மெட்ரோ கட்டணத்தை ரூ.60 முதல் 90 வரை உயர்த்திய பாஜக என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

‘டெல்லி மக்களுக்கு நல்ல நாள் முதல் பரிசு நண்பர்களே..!! மெட்ரோ கட்டணம் ₹60முதல் ₹90 வரை உயர்வு மகளிர் இலவச பேருந்து சேவை மூடல் 😄” என்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு, பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி பாஜக அமோக வெற்றி பெற்றது. தேர்தல் முடிவு வெளியாகி பல நாட்கள் ஆன நிலையிலும் டெல்லி முதல்வர் யார் என்பதை இதுவரை பாஜக தலைமை முடிவு செய்யவில்லை. பிப்ரவரி 17ம் தேதி தேர்வு செய்யப்படுவார்கள் என்று அக்கட்சி நிர்வாகிகள் கூறினர்.

இந்த நிலையில் டெல்லியில் ஆட்சியைப் பிடித்ததும் மெட்ரோ கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும், பெண்களுக்கு இலவச பஸ் சேவை நிறுத்தப்பட்டதாகவும் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆட்சியே அமைக்கப்படாத சூழலில் இந்த அறிவிப்பு வெளியாக எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழவே இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: thehindu.com I Archive

இது போன்ற அறிவிப்பை டெல்லி பாஜக வெளியிட்டதா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் ரத்து செய்யப்பட்டதாக அல்லது செய்யப்பட உள்ளதாக எந்த ஒரு அறிவிப்போ, செய்தியோ நமக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில், பெண்கள் இலவச பஸ் பயண திட்டம் நிறுத்தப்படாது என்று தேர்தலுக்கு முன்பே பாஜக அறிவித்த தகவல் நமக்கு கிடைத்தது.

அதே போல் டெல்லி மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும் எந்த செய்தியும் வெளியாகவில்லை. டெல்லி மெட்ரோ எக்ஸ் தள பக்கத்தை பார்த்த போது, சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது என்று குறிப்பிட்டு பதிவு வெளியாகி இருப்பது தெரிந்தது. அதில், “டெல்லி மெட்ரோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. அரசால் அமைக்கப்படும் சுயாதீன கட்டண நிர்ணய கமிட்டியால் தான் டெல்லி மெட்ரோ ரயில் கட்டணத்தை மாற்றியமைக்க முடியும். தற்போது அப்படி எந்த ஒரு கட்டண நிர்ணய கமிட்டியும் அமைக்கப்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

Archive

டெல்லியில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் புதிய ஆட்சி இன்னும் அமையவில்லை. புதிய அரசு பதவியேற்ற பிறகே அறிவிப்புகளை வெளியிட முடியும். யார் முதலமைச்சர் ஆவார்கள் என்பதே பிப்ரவரி 17ம் தேதி நடைபெறும் கூட்டத்தில்தான் முடிவெடுக்கப்படும் என்று டெல்லி பாஜக அறிவித்துள்ளது. டெல்லி மெட்ரோ கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று டெல்லி மெட்ரோவும் உறுதி செய்துள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தகவல் தவறானது என்பது தெளிவாகிறது.

முடிவு:

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் இன்னும் ஆட்சியே அமைக்கப்படாத சூழலில் டெல்லி மெட்ரோ கட்டணம் உயர்த்தப்பட்டது என்று சிலர் சமூக ஊடகங்களில் தவறாக பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:டெல்லியில் வெற்றி பெற்றதும் பாஜக மெட்ரோ கட்டணத்தை உயர்த்தியதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False