ஹிஜாப் அணிந்த மாணவியை சக மாணவர்கள் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்தியாவில் நடந்தது போன்று பகிரப்படும் அந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

ஹிஜாப் அணிந்த மாணவியை சில மாணவர்கள் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "ஹிஜாப் அணித்ததற்காக வகுப்பறையிலே சிறுமி சக மாணவர்களால் தாக்க படும் வீடியோ வெளியாகியுள்ளது . மாணவர்களிடையே விதைக்க பட்ட விஷம் இன்று நாட்டை நாசமாக்கி கொண்டிருக்கிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை S.Jaffar Sadiq என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் 22ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மை அறிவோம்:

ஹிஜாப் அணிந்ததற்காக இஸ்லாமிய மாணவியை சக மாணவர்கள் தாக்கியதாக வீடியோ பகிரப்பட்டுள்ளது. எங்கு நடந்தது, எப்போது நடந்தது என்று எந்த தகவலும் இல்லை. ஆனால், "மாணவர்களிடையே விதைக்கப்பட்ட விஷம் இன்று நாட்டை நாசமாக்கிக் கொண்டிருக்கிறது" என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் இந்தியாவில் நடந்தது என்பது போன்று பதிவிடப்பட்டிருப்பது தெளிவாகிறது.

இந்த சம்பவம் எங்கு, எப்போது நடந்து என்று அறிய ஆய்வு செய்தோம். வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த புகைப்படத்துடன் கூடிய செய்தியை சில ஊடகங்கள் வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது. இந்தோனேஷிய மொழியில் அந்த செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. அந்த செய்திகளைப் பார்த்தோம்.

2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம் தேதி வெளியிட்டிருந்த செய்தியில் இந்த சம்பவம் இந்தோனேஷியாவின் ஜாவா பகுதியில் நடந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஜாவா பகுதியில் உள்ள தீவு நகரான பூர்வொரேஜோ (Purworejo) பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இந்த சம்பவம் நடந்தது என்றும், மாணவியைத் தாக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: tribunnews.com I Archive 1 I suara.com I Archive 2

மேலும், அந்த மாணவியிடம் இருந்து பணத்தைப் பெறும் நோக்கில் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு செய்தியில் கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடக்கும் புகைப்படத்தையும், மூன்று மாணவர்கள் காவல் நிலையத்தில் அமர்ந்திருக்கும் படத்தையும் பகிர்ந்திருந்தனர்.

Archive

இந்தோனேஷிய மொழியில் வெளியான பதிவுகளை அப்படியே டைப் செய்து தேடிய போது இந்தோனேஷியாவின் மத்திய ஜாவா பகுதி கவர்னராக இருந்த Ganjar Pranowo என்பவரின் பதிவும் நமக்குக் கிடைத்தது. இவை எல்லாம் இந்த சம்பவம் இந்தியாவில் நடக்கவில்லை, 2020ல் இந்தோனேஷியாவில் நடந்தது என்பதை உறுதி செய்கின்றன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஹிஜாப் அணிந்ததற்காக தாக்கப்பட்ட சிறுமி என்று பரவும் வீடியோ இந்தோனேஷியாவில் நடந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஹிஜாப் அணிந்த மாணவி தாக்கப்படும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா?

Written By: Chendur Pandian

Result: False