தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தி.மு.க மகளிரணியுடன் சபரிமலைக்கு செல்வேன் என்று கனிமொழி எம்.பி பேசியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

கனிமொழி புகைப்படத்துடன் கூடிய பாலிமர் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், "திமுக ஆட்சிக்கு வந்த உடன் திமுக மகளிரணியுடன் சபரிமலைக்கு செல்வேன் - கனிமொழி எம்.பி பேச்சு" என்று இருந்தது. நிலைத் தகவலில், "பிரச்சாரத்திலும் இதுமாதிரியான பேச்சுக்கள் தேவையா? திமுகாவிலுள்ள சபரிமலை செல்லும் பாக்தர்கள் இந்த தேர்தலில் சரியான படம் புகட்டி நிரந்தரமாக வீட்டிலியே அமரவைப்போம்...." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த பதிவை சண்முக பூபாலன் என்பவர் 2021 ஏப்ரல் 1 அன்று பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்து கடவுள்கள் பற்றி தி.மு.க-வினர் கூறாததை எல்லாம் வைத்து நியூஸ் கார்டு தயாரித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஏற்கனவே, தி.மு.க மகளிர் அணியினரை அழைத்துக்கொண்டு சபரி மலை செல்வேன் என்று கனிமொழி பேசியதாக வதந்தி பரவியது. இது போலியானது, கனிமொழி அப்படி பேசவில்லை என்று அவர் தரப்பில் நம்மிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

தற்போது, தேர்தல் பிரசாரம் உச்சத்தில் உள்ள சூழலில் தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் திமுக மகளிரணியுடன் சபரிமலைக்கு செல்வேன் என்று கனிமொழி கூறியதாக புதிதாக நியூஸ் கார்டு பரவி வருகிறது. இந்த நியூஸ் கார்டு மார்ச் 27, 2021ம் தேதி புதிய தலைமுறை வெளியிட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக ஊடகங்களில் பலரும் இதை வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

https://twitter.com/sudalaiFC/status/1377645142841061377

Archive

கனிமொழி எம்.பி சபரிமலைக்கு செல்வது தொடர்பாக 2021 சட்டமன்ற தேர்தலின் போது பேசினாரா என்று கூகுளில் தேடிப் பார்த்தோம். அது போல எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே, பாலிமர் தொலைக்காட்சியின் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் மார்ச் 27ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம்.

Archive Link

மார்ச் 27ம் தேதி பாலிமர் தொலைக்காட்சி கனிமொழி தொடர்பாக எந்த ஒரு நியூஸ் கார்டையும் வெளியிடவில்லை என்பது தெரிந்தது. மேலும், பாலிமர் தொலைக்காட்சி வெளியிடும் நியூஸ் கார்டுக்கும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டுக்கும் சில வித்தியாசங்கள் இருப்பது தெரிந்தது.

வழக்கமாக பாலிமர் தொலைக்காட்சி பயன்படுத்தும் தமிழ் ஃபாண்ட்க்கும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்டுக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருந்தது. எனவே, பாலிமர் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டை எடிட் செய்து தங்கள் மனதுக்குத் தோன்றியது போல கருத்தை கனிமொழி பெயரில் பதிவிட்டு பரப்பியது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இதை உறுதி செய்ய பாலிமர் தொலைக்காட்சியின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி அருணை தொடர்பு கொண்டு கேட்டோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு என்பதை உறுதி செய்தார். இதன் அடிப்படையில் தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் தி.மு.க மகளிரணியுடன் சபரிமலைக்கு செல்வேன் என்று கனிமொழி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

திமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக மகளிரணியினரோடு சபரிமலை செல்வேன் என்று கனிமொழி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:திமுக ஆட்சிக்கு வந்ததும் சபரிமலை செல்வேன் என்று கனிமொழி பேசியதாக பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian

Result: False