ரயில் தண்டவாளத்தில் நட் போல்ட் திருடும் சிறுவர்கள் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது எங்கு எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ரயில் தண்டவாளத்தில் உள்ள நட், போல்ட்-களை சில சிறுவர்கள் கழற்றி திருடும் வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "சிறுசா இருந்தாலும் பெருசா இருந்தாலும் பாம்பு விஷ‌ ஜ‌ந்துதான்... பாரபட்சம் பாக்காம அடிச்சு பல்லை புடுங்கி விட்ரனும்...." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் சிறுவர்கள் திருட்டைப் பற்றி மட்டும் குறிப்பிடப்படவில்லை. சிறுவர்களாக இருந்தாலும் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால் பாரபட்சம் பார்க்காமல் அடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்கள் சமூகம், அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று எல்லாம் மிகவும் கொடூரமான முறையில் விமர்சித்திருந்ததால் இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

இந்த வீடியோ காட்சிகளை InVid & WeVerify தளத்தின் உதவியுடன் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது உருது மொழியில் வெளியான சில பாகிஸ்தான் ஊடக வீடியோ பதிவுகள் நமக்குக் கிடைத்தன. அதை மொழிபெயர்த்துப் படித்துப் பார்த்தோம். Sir Taj Khan Gate, Boat Basin Chowk பகுதியில் சிறுவர்கள் தண்டவாளத்தின் நட், போல்ட் உள்ளிட்ட பொருட்களைத் திருடினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பகுதி எங்கு உள்ளது என்று தேடிய போது பாகிஸ்தானில் இருப்பது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் கூகுளில் சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது பாகிஸ்தானின் கராச்சி போலீஸ் சார்பில் வெளியிடப்பட்ட யூடியூப் வீடியோ ஒன்று கிடைத்தது. அதில் முதலில் சிறுவர்கள் திருடும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ வந்தது. அதைத் தொடர்ந்து அந்த சிறுவர்களை கராச்சி போலீசார் பிடித்து வைத்து அவர்களின் பெயரைக் கேட்கும் காட்சிகள் வந்தது. அதாவது பாகிஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் திருடிய சிறுவர்களை அந்நாட்டு போலீசார் பிடித்ததாகச் செய்தி வெளியாகி இருந்தது. இதன் மூலம் இந்த சம்பவம் இந்தியாவில் நடந்தது இல்லை என்பது தெளிவாகிறது.

திருட்டு எல்லா இடங்களிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பீகாரில் சில கோடி மதிப்பிலான தண்டவாளங்கள் சமீபத்தில் திருடப்பட்டதாக செய்திகள் வெளியானது. பழைய தண்டவாளங்கள் உள்ளிட்ட ரயில்வே பொருட்கள் திருட்டு நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்காக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் குற்றவாளிகள் என்பது சரியானதாக இருக்காது. திருட்டை நியாயப்படுத்தவில்லை, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கொல்ல வேண்டும் என்று வன்மத்தை பரப்புவதையே தவறு என்கிறோம்.

இந்த சம்பவம் எங்கு நடந்தது என்று குறிப்பிடாமல் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த சிறுவர்களைக் கூட அடித்து உதைத்து கொல்ல வேண்டும் என்பது போன்று மிக ஆபத்தான கருத்தை சமூக ஊடகங்களில் பரப்பியிருப்பது நம்முடைய ஆய்வில் தெளிக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பாகிஸ்தானில் சிறுவர்கள் தண்டவாளத்தில் நட், போல்ட் திருடிய வீடியோவை இந்தியாவில் நடந்தது போலவும், இந்தியாவில் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் தாக்க வேண்டும் என்பது போலவும் வதந்தி பரப்பியிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தண்டவாளத்தில் திருடிய சிறுவர்கள் என்று பரவும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா?

Written By: Chendur Pandian

Result: Missing Context