புற்றுநோயால் மரணமடைந்த உலகப் புகழ்பெற்ற டிசைனர் என்று நடிகை படத்தை பரப்பும் நெட்டிசன்கள்!

இந்தியா | India சமூகம் சர்வதேசம் | International

உலகப் புகழ் பெற்ற வடிவமைப்பாளர் புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழப்பதற்கு முன்பு கடைசியாக எழுதியது என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நடிகை சோனாலி பிந்த்ரேவின் இயல்பான புகைப்படம் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோது எடுத்த புகைப்படத்தை ஒன்று சேர்த்துப் பதிவிட்டுள்ளனர்.  நிலைத் தகவலில், என் வங்கி கணக்கில் ஏராளமான பணம் கிடக்கிறது ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லையே.!! என் வீடு அரண்மனை போன்று கோட்டை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில் ஒரு சிறு படுக்கையில் கிடக்கிறேன்.

இந்த உலகத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் மருத்துவமனையில் உள்ள ஆய்வகங்களுக்கு மற்றொரு லேபிற்க்கும் மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்.! அன்று தினசரி 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள். ஆனால் இன்று என் தலையில் முடியே இல்லை

உலகிலுள்ள பல வகையான உயர் நட்சத்திர ஓட்டல்கள் உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இன்று பகலில் இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு. !

தனியார் ஜெட்டில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று மருத்துவமனை வராண்டாவிற்கு வருவதற்கு இரண்டு நபர்கள் உதவுகிறார்கள்…. எல்லா வசதி வாய்ப்புகளும் எனக்கு உதவவில்லைஎந்த விதத்திலும் ஆறுதல் தரவில்லைஆனால் சில அன்பானவர்களின் முகங்களும் அவர்களது தொழுதல்களும் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ! இவ்வளவு தானுங்க வாழ்க்கையாருக்கும் உதவாதவெறும் பணம் பதவி அதிகாரம் என்று இருக்கும் மனிதர்களை மதிப்பதை தவிருங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Deenul Islam என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 மே 2ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உலகப் புகழ் பெற்ற வடிவமைப்பாளர் மரணத்தைத் தழுவுவதற்கு முன்பு எழுதிய வார்த்தைகள் என்று குறிப்பிட்டுவிட்டு, நடிகை சோனாலி பிந்த்ரேவின் படத்தை வைத்துள்ளனர். படத்தில் இருப்பவர் உலகப் புகழ் பெற்ற வடிவமைப்பாளரும் இல்லை, அவர் தற்போது புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு நலமுடன் வாழ்கிறார் என்பதை உறுதி செய்ய ஆய்வு மேற்கொண்டோம்.

உண்மைப் பதிவைக் காண: Instagram

இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படத்தை சோனாலி பிந்த்ரே 2021 ஜூன் 6ம் தேதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தது தெரிந்தது. சிகிச்சை பெற்ற போது, தற்போது தான் எப்படி இருக்கிறேன், இன்று நான் என்னை திரும்பிப் பார்க்கும் போது வலிமையைக் காண்கிறேன் என்று குறிப்பிட்டு பதிவிட்டிருப்பது தெரிந்தது. மேலும் சோனாலி பிந்த்ரே புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற போது 2018ம் ஆண்டு இந்த புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி இருப்பதும் தெரிந்தது. தற்போது இன்ஸ்டாகிராமில் சோனாலி பிந்த்ரே ஆக்டிவாக பதிவிட்டு வருகிறார். அவர் நலமுடன் உள்ளார். இதன் மூலம் படம் தவறானது என்று தெரியவருகிறது.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

நம்முடைய தேடலில் இந்த பதிவில் உள்ள கருத்துக்களை சமீபத்தில் மரணமடைந்த புகழ் பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் கூறியதாகவும் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது அதே போன்று வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் இதே பதிவை வேறு சிலர் பகிர்ந்து வருகின்றனர். எனவே, இந்த மரண குறிப்பை அளித்தது யார் என்று அறிய ஆய்வைத் தொடர்ந்தோம். 

உண்மைப் பதிவைக் காண: Facebook

கிறிஸ்டா ரோட்ரிக்ஸ் (Crisda Rodriguez) என்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் குறிப்பிடப்பட்டது போன்று உலகப் புகழ் பெற்ற வடிவமைப்பாளர் யாராவது இருந்தார்களா என்று தேடிப் பார்த்தோம். ஆனால்  Kyrzayda Rodriguez என்ற பெயரில் ஒருவர் இருந்திருப்பது தெரிந்தது. கூகுளில், Kyrzayda Rodriguez, கடைசி வார்த்தைகள் என்பது உள்ளிட்ட சில கீ வார்த்தைகளை டைப் செய்து தேடினோம். அப்போது இது தொடர்பான கட்டுரைகள் நமக்குக் கிடைத்தன. 

உண்மைப் பதிவைக் காண: refinery29.com I Archive

2017ம் ஆண்டு அவருக்கு வயிற்றுப் புற்றுநோய் கண்டறியப்பட்டதாகவும் 2018ல் அவர் மரணமடைந்தார் என்றும் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அவர் பேசியதாக ஒரு வீடியோவும் நமக்குக் கிடைத்தது. அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ளது போன்ற கருத்துக்கள் இருந்தன. அதில் கூடுதலாகப் பல விஷயங்களை சேர்த்துப் பகிர்ந்திருப்பதும் தெரிந்தது.

மொட்டைத் தலையுடன் இருக்கும் பெண் யார் என்று அறிய அந்த படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அந்த பெண்ணின் பெயர் Nicole Schweppe என்றும், அமெரிக்காவைச் சார்ந்த கிராபிக் டிசைனர் என்பதும், மார்பக புற்றுநோய் பாதிப்பு காரணமாக கீமோ தெரப்பி சிகிச்சைக்கு தயாரான போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்றும் தெரிந்தது. இதை அவர் தன்னுடைய பிளாகில் பதிவிட்டிருந்தார். ஓராண்டுக்குப் பிறகு நோயில் இருந்து விடுதலை பெற்ற பிறகு என்று குடும்ப படத்தையும் அவர் பதிவிட்டிருந்தார்.

இதன் மூலம் Kyrzayda Rodriguez என்பவர் 2018ம் ஆண்டு புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார் என்பதும், அவர் மரணமடைவதற்கு முன்பு இருப்பதை வைத்து நிம்மதியாக சந்தோஷமாக வாழுங்கள் என்று பேசியதும் உண்மை என்று தெளிவாகிறது. ஆனால், Kyrzayda Rodriguez என்று குறிப்பிட்டு பிரபல நடிகை சோனாலி பிந்த்ரே படத்தைத் தவறாக வைத்துப் பகிர்ந்திருப்பதன் மூலம் சிறிது உண்மையுடன் தவறான பல தகவல் மற்றும் படத்தை பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

புற்றுநோயால் மரணமடைந்த உலகப் புகழ் பெற்ற டிசைனர் என்று நடிகை சோனாலி  பிந்த்ரே படத்தை தவறாக பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:புற்றுநோயால் மரணமடைந்த உலகப் புகழ்பெற்ற டிசைனர் என்று நடிகை படத்தை பரப்பும் நெட்டிசன்கள்!

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False