
‘’பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ஆகிய திட்டத்தின் கீழ் கோவிட் 19 பாதித்து இறந்தவர்கள் சார்பாக, அவரது குடும்பத்தினர் ரூ.2 லட்சம் காப்பீடு விண்ணப்பித்து பெறலாம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இந்த செய்தியை, வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மைத்தன்மை பற்றி ஆராயும்படி கேட்டுக் கொண்டனர்.
இதில், ‘’வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்காக, 1 – பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா (பி.எம்.ஜே.ஜே.பி.ஒய்) ரூ .330 / – மற்றும் 2 – பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா பீமா யோஜனா (பி.எம்.எஸ்.பி.ஒய்) 12 / – ரூபாய் பிரீமியம் கட்டணத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு வைத்திருப்போர், 2019- 2020 நிதியாண்டில் இந்த பிரீமியம் தொகையை வங்கிகள் உங்களது கணக்கில் இருந்து கழித்துள்ளதா என்று சரிபாருங்கள். அப்படி பணம் எடுத்திருந்தால், அது நீங்கள் இந்த திட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ளதாக அர்த்தம். நீங்களோ அல்லது உங்களது குடும்பத்தினரோ கொரோனா பாதித்து இறக்கும்பட்சத்தில் இந்த திட்டங்களின் கீழ் விண்ணப்பித்தால் ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும்,’’ என்று எழுதியுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என்று நம்பி ஷேர் செய்வதையும் கண்டோம்.

உண்மை அறிவோம்:
கோவிட் 19 பற்றி நாள்தோறும் சமூக வலைதளங்களில் புதுப்புது தகவல்கள் பகிரப்படுகின்றன. அதில் ஒன்றுதான் மேலே நாம் கண்ட செய்தியும். ‘2019 – 2020 நிதியாண்டில் பாலிசி எடுத்திருந்தால்,’ என்று இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலமாக, இது சென்ற ஆண்டு முதலே பரவி வரும் தகவல் என்று உறுதியாகிறது.
அடுத்ததாக, இவர்கள் கூறும் 2 திட்டங்களை பற்றி விரிவாக பார்க்கலாம். பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் (PMSBY) என்பது கடந்த 2015ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதாகும். இதற்கான ஆண்டு பிரிமீயம் ரூ.12 மட்டுமே. விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு காப்பீடு வழங்குவதற்காக, மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம். கோவிட் 19க்கும் இதற்கும் தொடர்பில்லை.
இதைத்தொடர்ந்து, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) பற்றி தகவல் தேடினோம். அப்போது, இதுவும் 2015ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் என்றும், ஏதேனும் எதிர்பாராத காரணத்தால் பாலிசிதாரர் உயிரிழக்கும் பட்சத்தில், அவரது குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் காப்பீடு தரக்கூடியது என்றும் தெரியவந்தது. ஏதேனும் நோய் (கோவிட் 19 உள்பட) பாதித்து உயிரிழந்தால், இதில் காப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியும். எனினும், காப்பீடு வழங்குவதற்கு தனி விதிமுறைகள் உள்ளன. அதற்கு தகுதி இருந்தால் மட்டுமே காப்பீடு பெற முடியும். விபத்துகளுக்கு இதில் காப்பீடு தரப்படுவதில்லை.
Financialservices.gov.in Link I EconomicTimes Link
எனவே, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) என்பது பாலிசி எடுத்த நபர் ஏதேனும் விபத்தில் பாதிக்கப்பட்டால் அல்லது உயிரிழந்தால் மட்டுமே காப்பீடு தரக்கூடிய திட்டமாகும். அதற்கும், கோவிட் 19க்கும் தொடர்பில்லை என்று தெளிவாகிறது.
இதேபோல, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்பது பாலிசி எடுத்த நபர் நாள்பட்ட உடல்நிலை பாதிப்பு, நோய் போன்றவற்றால் உயிரிழந்தால், காப்பீடு வழங்கக்கூடிய திட்டமாகும். இதில், கோவிட் 19 உயிரிழப்புகளுக்கும் விண்ணப்பிக்க முடியும். அதற்கும் சில பிரத்யேக விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இது ஓரளவுக்கு உண்மையே.
இதுபற்றி விளக்கம் அளித்து ஏற்கனவே மத்திய அரசின் கீழ் இயங்கும் PIB FactCheck ட்வீட் வெளியிட்டுள்ளது. அதனை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:கோவிட் 19 மரணங்களுக்கு பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்குமா?
Fact Check By: Pankaj IyerResult: Partly False
