
திருவண்ணாமலையில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய அணிவகுப்பு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் பேரணி வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, திருவண்ணாமலையில் ஆர்.எஸ்.எஸ். பாதை அணிவகுப்பு மிகவும் பலத்த போலீஸ் பாதுகாப்பில்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் ஆர்எஸ்எஸ் பேரணி நடந்தது என்று வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், எப்போது நடந்தது என்று குறிப்பிடப்படவில்லை. திருவண்ணாமலையில் ஆர்எஸ்எஸ் பேரணி முன்பு நடந்ததாக செய்தி படித்த நினைவு இருந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வீடியோ தகவல் உண்மைதானா என்று அறிய ஆய்வு செய்தோம்.
சமீபத்தில் ஏதேனும் ஆர்எஸ்எஸ் பேரணி நடந்ததா என்று தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு தகவலும் நமக்குக் கிடைக்கவில்லை. 2023, 24ம் ஆண்டுகளில் ஊர்வலம் நடந்ததாக சில செய்திகள் கிடைத்தன. ஆனால், எல்லாம் பகல் நேரத்தில் நடந்ததாகவே வீடியோக்கள் கிடைத்தன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருப்பது போன்று எந்த பழைய வீடியோவும் கிடைக்கவில்லை.

உண்மைப் பதிவைக் காண: news18.com I Archive
இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவை 2025 அக்டோபரில் பலரும் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில், மத்தியபிரதேச மாநிலம் ரத்லம் (Ratlam) என்ற இடத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் பேரணி நடந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஊடகங்களிலும் கூட இந்த பேரணி தொடர்பான செய்தி 2025 அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகி இருந்தது. ரத்லமில் ஐந்து இடங்களில் இருந்து தொடங்கிய பேரணி பஸ் நிலையம் அருகே முடிந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆர்.எஸ்.எஸ் ஊடகமான Organiser-ன் சமூக ஊடக பக்கத்திலும் கூட இந்த வீடியோ வெளியாகி இருந்தது. அக்டோபர் 6, 2025 அன்று வெளியான அந்த பதிவிலும் கூட இந்த பேரணி ரத்லமில் நடந்தது என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. இவையே போதுமான ஆதாரங்களாக இருந்தாலும், அந்த பகுதியின் இடம் கிடைத்தால் கூடுதல் பலமாக இருக்கும் என்பதால் ஆய்வைத் தொடர்ந்தோம்.

ரத்லம் பஸ் நிலையம் அருகே இந்த பேரணி நடந்தது என்று குறிப்பிட்டிருந்ததால், அந்த பகுதியை கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் பார்வையிட்டோம். வீடியோவில் சாலை வளைவைக் காண முடிந்தது. அப்படி ஒரு வளைவு உள்ளதா என்று தேடிய போது ஒரு சாலை நமக்குக் கிடைத்தது. அந்த இடத்தில் இருந்த கட்டிடங்களும், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியொவில் இடம் பெற்றிருந்த கட்டிடங்களும் ஒத்துப்போயின. இதன் மூலம் இந்த இடம் மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம்தான் என்பது உறுதியானது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
மத்திய பிரதேசத்தில் 2025 அக்டோபரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் பேரணியின் வீடியோவை தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் நடந்தது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:திருவண்ணாமலையில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False


