
தி.மு.க எம்.பி ஆ.ராசாவுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் வெளியிட்ட அறிக்கை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் வெளியிட்ட அறிக்கையின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “சில நாட்களுக்கு முன் திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆ.ராசா அவர்கள் தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களின் பிறப்பை குறித்து கருத்து கூறி இருந்தது கருத்து சுதந்திரத்திற்கு உட்பட்டது.
ஆகவே கருத்து சுதந்திரத்தை எதிர்க்கும் அதிகாரத்தில் இருப்பவர்களைக் கண்டித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆ.ராசா அவர்களுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் என்றும் துணை நிற்கும் என நிறுவனத் தலைவர் திரு. கமலஹாசன் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.
அது சமயம் மக்கள் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ராசா அவர்களை கண்டித்துத் தேர்தல் நேரத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மற்றும் சமுதாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவது கண்டிக்கதக்கது” என்று இருந்தது.
நிலைத் தகவலில், “ஒருவரின் பெற்ற தாயை இகழ்ந்து பேசுவது கருத்து சுதந்திரமாம் காமஹாசன் கட்சியின் அறிக்கை. இவன்கள் திமுகவின் B டீம் இதிலிருந்தே தெரிகிறது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை Karthi Keyan என்பவர் 2021 மார்ச் 28 அன்று பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இதை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க எம்.பி-யும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராஜா பேசியதை எடிட் செய்தும், அதன் முழு பதிவையும் இரு தரப்பினரும் மாற்றி மாற்றிப் பதிவிட்டு வருகின்றனர். ஆ.ராசா பேசிய விவகாரத்துக்குள் நாம் செல்லவில்லை. இந்த நிலையில் ஆ.ராசாவுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் அறிக்கை வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் ஒரு அறிக்கையின் புகைப்படத்தை வைரலாக பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.

ஆ.ராசாவுக்கு மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும் என்று கமலஹாசன் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறியிருந்தது, சில எழுத்துப் பிழைகள் இருந்தது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம், மகேந்திரன் ஏதாவது அறிக்கை வெளியிட்டுள்ளார்களா என்று தேடினோம். மகேந்திரன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்த்தபோது இது போலியானது என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். அதில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், சில சமூக விரோதிகளால் ஊடகங்களில் பரவும் இந்த சுற்றறிக்கை தவறானது! அருவருக்கத்தக்க இச்செயலைச் செய்தவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I hindutamil.in I Archive 2
இது தொடர்பாக தமிழ் இந்து உள்ளிட்ட ஊடகங்களிலும் செய்தி வெளியாகி உள்ளது. மகேந்திரன் இந்த அறிக்கையை வெளியிடவில்லை, விஷமிகள் யாரோ இப்படி போலியாக அறிக்கையைத் தயாரித்து பரப்பி வருகின்றனர் என்று அதிலும் குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் இந்த அறிக்கை போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஆ.ராசாவுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளிப்பதாக பரவும் அறிக்கை போலியானது என்று உறுதியாகிறது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ஆ.ராசாவுக்கு ஆதரவாக ம.நீ.ம மகேந்திரன் அறிக்கை வெளியிட்டாரா? – விஷம வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False
