600 ஆண்டுகால அவமானங்களையும் 70 ஆண்டுகால சீர்கேடுகளையும் துடைத்தெறிய 6 முறையாவது பாஜக ஆட்சியில் அமர வேண்டும் என்று சர்வதேச நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பிரதமர் மோடி மற்றும் வெளிநாட்டைச் சார்ந்த ஒருவர் புகைப்படங்களை வைத்து புகைப்பட பதிவை உருவாக்கியுள்ளனர். மோடியின் புகைப்படத்துக்குக் கீழ், "600 ஆண்டு அவமானங்களையும், 70 ஆண்டுகால சீர்கேடுகளையும் துடைத்தெறிய 6 முறையாவது BJP ஆட்சியில் அமர வேண்டும் .." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வெளிநாட்டைச் சார்ந்தவர் படத்துக்கு அருகில், "ஐ.நா சர்வதேச நீதிமன்ற நீதிபதி கருத்து.." என்று இருந்தது.

இந்த பதிவை Kovaithenral என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 அக்டோபர் 12ம் தேதி வெளியிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி தொடர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்ற நீதிபதியே கூறிவிட்டார் என்று பா.ஜ.க ஆதரவாளர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். 70 ஆண்டுகால ஆட்சி என்றால் அதில் வாஜ்பாயின் 6 ஆண்டு காலமும் அடங்கும். வாஜ்பாயின் ஆட்சியையும் குறைகூறுகிறார்களா என்று தெரியவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்ற நீதிபதி ஒருவர் கூறினார் என்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். ஆனால், அவர் பெயர் என்ன, எங்கு, எப்போது கூறினார் என்று குறிப்பிடவில்லை. எனவே, இந்த பதிவு உண்மைதானா என்று அறிய ஆய்வு செய்தோம்.

முதலில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள, சர்வதேச நீதிபதி என்று குறிப்பிடப்பட்டுள்ள நபர் யார் என்று அறிய ஆய்வை மேற்கொண்டோம். அந்த புகைப்படத்தை மட்டும் தனியாக வெட்டி, கூகுள் ரிவர்ஸ் இமேஜில் பதிவேற்றித் தேடினோம். அப்போது படத்தில் இருக்கும் நபர் சர்வதேச நீதிமன்ற நீதிபதி இல்லை என்பதும், அவர் பிபிசி நிறுவனத்தின் முன்னாள் செய்தியாளர் என்பதும் தெரியவந்தது.

உண்மைப் பதிவைக் காண: rediff.com I Archive

படத்தில் உள்ளவரின் பெயர் மார்க் டூலி. இவர் 40 ஆண்டுகாலம் பிபிசி இந்தியாவின் செய்தியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள படத்தை 2018ம் ஆண்டு rediff.com என்ற இணையதளம் வெளியிட்டிருப்பதும் தெரிந்தது. மேலும், இவரை வைத்து பல வதந்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதையும் காண முடிந்தது.

குறிப்பாக பா.ஜ.க-வுக்கு ஆதரவாக மார்க் டூல்லி கட்டுரை எழுதியதாக பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதையும் அது தவறு என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவின் மராத்தி உள்ளிட்ட பல மொழி சேவைகளில் கட்டுரை வெளியாகி இருப்பதும் தெரியவந்தது.

உண்மைப் பதிவைக் காண: hindustantimes.com I Archive

தொடர்ந்து தேடிய போது, பாஜக-வுக்கு ஆதரவாக மார்க் டூலி கட்டுரை எழுதினார் என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவிய போது (2016ம் ஆண்டு) அப்போது மத்திய அமைச்சராக இருந்த வெங்கையாநாயுடு மார்க் டூலியை தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். அதற்கு அவர் அவை வதந்தி என்று தெளிவுபடுத்தியதாக மார்க் டூலி எழுதியிருந்த செய்தி கட்டுரை நமக்கு கிடைத்தது. இதன் மூலம் மார்க் டூலி பா.ஜ.க-வுக்கு ஆதரவான கருத்தை வெளியிடவில்லை என்பது உறுதியானது.

சர்வதேச நீதிமன்ற நீதிபதி என்று பகிரப்பட்ட நபர் பிபிசி-யின் முன்னாள் செய்தியாளர்கள் என்பது உறுதி செய்துள்ளோம். உண்மையில் சர்வதேச நீதிமன்ற நீதிபதி யாராவது மோடி ஆட்சி தொடர வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளாரா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. இதன் அடிப்படையில், பாஜக அடுத்து 6 முறையாவது ஆட்சியில் அமர்வது அவசியம் என்று சர்வதேச நீதிபதி கூறினார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

70 ஆண்டுகால சீர்கேட்டை சரி செய்ய பாஜக அடுத்து ஆறு முறை ஆட்சியில் அமர வேண்டும் என்று சர்வதேச நீதிபதி கூறினார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பாஜக குறைந்தது 6 முறை ஆட்சியில் அமர்வது அவசியம் என்று சர்வதேச நீதிபதி கூறினாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False