ரூ.385 கோடிக்கு மது விற்க இலக்கு நிர்ணயித்த திராவிட மாடல் அரசு என்று பரவும் செய்தி உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

தீபாவளியையொட்டி திமுக அரசு ரூ.385 கோடிக்கு மது விற்க இலக்கு நிர்ணயித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தினத் தந்தி நாளிதழில் வெளியான செய்தியை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்: ரூ.385 கோடிக்கு மது விற்க இலக்கு” என்று தலைப்பிட்டு ஒரு செய்தியும், அதே பக்கத்தில் “கணவன் மது குடித்ததால் இளம்பெண் தற்கொலை” என்ற செய்தியும் இடம் பெற்றிருப்பது வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் சகறப்பான திராவிட மாடல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு 2023 நவம்பர் 1ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

டாஸ்மாக் விற்பனை வருவாய் மகிழ்ச்சியாக இருந்தாலும் அது தொடர்பாக வௌியாகும் செய்திகள் அரசுக்கு இனிப்பாக இருப்பது இல்லை. முடிந்த வரை டாஸ்மாக் தொடர்பான செய்திகளை வெளியிடாமலே வைத்திருப்பார்கள்.

அப்படி இருக்கும் போது, தீபாவளிக்கு ரூ.385 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக எப்படி செய்தி வெளியானது என்று புரியவில்லை. மேலும் கடந்த ஆண்டே ரூ.600 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகத் தந்தி டிவி செய்தி வெளியிட்டது. 

Archive

அப்படி இலக்கு எல்லாம் நிர்ணயிக்கப்படவில்லை என்று அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி விளக்கம் அளித்திருந்தார். உண்மை இப்படி இருக்க இந்த தினத்தந்தி செய்தி பற்றி அறிய ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

இந்த தலைப்பை அப்படியே கூகுளில் தமிழில் டைப் செய்து தேடினோம். அப்போது, 2019ம் ஆண்டு இந்த செய்தியை தினத்தந்தி வெளியிட்டிருப்பது தெரிந்தது. 2019ம் ஆண்டு தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சியிலிருந்தது. அந்த கட்சியின் பெயரிலும் திராவிடம் உள்ளது என்றாலும் திராவிட மாடல் என்று பொதுவாக தி.மு.க அரசையே எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 2019ம் ஆண்டு செய்தியை 2023 செய்தி போல பகிர்ந்து திராவிட மாடல் என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் இந்த பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பது உறுதியாகிறது.

முடிவு:

ரூ.385 கோடிக்கு மது விற்க டாஸ்மாக் இலக்கு நிர்ணயித்துள்ளது என்று 2019ம் ஆண்டு வெளியான செய்தியை இப்போது திமுக அரசு நிர்ணயித்த இலக்கு போல சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ரூ.385 கோடிக்கு மது விற்க இலக்கு நிர்ணயித்த திராவிட மாடல் அரசு என்று பரவும் செய்தி உண்மையா?

Written By: Chendur Pandian 

Result:Partly False