FACT CHECK: இந்திய விவசாயிகள் ஆதரவு கூட்டத்தில் கனடா பிரதமர் பங்கேற்கவில்லை!

இந்தியா | India சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் நடந்த போராட்டத்தில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சீக்கியர்களுக்கு மத்தியில் கனடா பிரதமர் அமர்ந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மோசடிக்கு எதிராக.விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில்கனட பிரதமர். பாசிஸத்தின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து” போராடிவரும்… விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் சீக்கியர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவினை தெரிவித்து

அவர்களுடன் போராட்டத்தில் கலந்துகொண்ட கனடா பிரதமர், பாஸிசம்வீழட்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Tamil Muslim Media என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 டிசம்பர் 23 அன்று பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்தியாவில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்திருந்தார். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டார் என்று அவருக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்தது. இருப்பினும் விவசாயிகளுக்கு தன்னுடைய ஆதரவு தொடரும் என்று அவர் அறிவித்தார்.

இந்த நிலையில், கனடாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடந்தது என்றும், அதில் தன்னுடைய ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார் என்பது போலவும் பதிவிடப்பட்டுள்ளது. சீக்கியர்கள் மத்தியில் தலையில் துண்டு ஒன்றை கட்டிக்கொண்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமர்ந்துள்ளார். யாரும் மாஸ்க் அணியவில்லை. கொரோனா பரவல் அச்சம் உள்ள நிலையில் மாஸ்க் அணியாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது. பலரும் இதை ஷேர் செய்து வருவதால் இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

எனவே, இந்த புகைப்படம் உண்மையில் கனடாவில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டதுதானா என்று ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படம் 2015ல் இருந்து பல செய்தி ஊடகம், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. 

hindustantimes.com ஊடகம் 2015ம் ஆண்டு வெளியிட்டிருந்த செய்தியில் இந்த புகைப்படம் இருந்தது. இந்த புகைப்படத்தை REUTERS செய்தி நிறுவனம் வெளியிட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

எனவே REUTERS தளத்தில் இந்த புகைப்படம் உள்ளதா என்று தேடினோம். 2015ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டின் ஓட்டோவா குருத்வாராவில் சீக்கிய சமூகம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற கனடா பிரதமர் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: hindustantimes.com I Archive 1 I pictures.reuters.com I Archive 2

இதன் மூலம் 2015ம் ஆண்டு படத்தை எடுத்து தற்போது நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புபடுத்தி பதிவிடப்பட்டு இருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2015ம் ஆண்டு எடுக்கப்பட்ட படத்தை 2020 விவசாயிகள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்று தவறாக பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது.  எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:இந்திய விவசாயிகள் ஆதரவு கூட்டத்தில் கனடா பிரதமர் பங்கேற்கவில்லை!

Fact Check By: Chendur Pandian 

Result: False